பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கீரைத் தண்டு

33

யைச் சிறந்த விரதமாகக் கொள்வது; புலால் மறுத்தலை முதல் கடைப்பிடியாக உடையது. சைவர்களிலும் முருகன் அடியார்கள் புலாலுணவைக் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. ஆட்டையும் கோழியையும் கொலை செய்து தம் வயிற்றை இடுகாடாக்கும் மக்கள் முருகன் அருளைப் பெறமுடியாது. ஆடு முருகனுடைய வாகனம்; கோழி அவனுடைய கொடி. அந்த இரண்டுக்கும் தீங்கு புரிபவர்கள் எப்படி முருகன் அடியாராக இருக்க முடியும்......”

பிரசங்கி மேலே என்ன பேசினாரோ, விசாகன் உண்ர வில்லை.'ஆட்டுக்கு ஹிம்சை உண்டாக்கினவன் முருகன் அடியானாக இருக்க முடியாது' என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்து போனான்.'நம்முடைய செயலைத் தெரிந்து கொண்டுதான் இப்படிச் சொல்கிறாரோ? பாவம்! அந்த ஆடு என்ன துடிதுடித்தது! அதன் காலில் ஒழுகின ரத்தம்! ஐயோ! அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே. ஒரு கீரைப்பாத்தி போனால் மற்றொரு கீரைப்பாத்தி போடலாம். ஆடு இறந்து போய்விட்டால், அதன் உயிரை மறுபடியும் வாங்கி வர முடியுமா?......' அவனுடைய பச்சாத்தாபம் வளர்ந்தது; விரிந்தது. வேறு ஞாபகமே உண்டாகவில்லை.

'செய்தது செய்துவிட்டோம். இனிமேல் என்ன செய்வது? கடவுளே! வடிவேல் முருகா! அந்த ஆட்டை எப்படியாவது காப்பாற்று. நான் வேண்டுமென்று செய்யவில்லையே! நீ காப்பாற்ற வேண்டும், அப்பனே!'-வழி நெடுக இப்படியே வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தான் பண்ணிய பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். முதல் பிராயச்சித்தம் சின்னத்தம்பியுடன் சகஜமாக இருப்பது அவன் ரிக் ஷாவில் பழையபடி எறுவது. இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருந்தான். பிறகு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தான்.

குமரீ-3