பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

தீவட்டிகளை எடுத்துக் கொண்டு, கோவில்குடிக் கோயில் கதவுகளுக்குத் தீயிட்டான். வெள்ளைத் தளபதியைச் 'சிரம'ப்படும்படி விட்டு விட்டு நாம் சும்மா இருப்பதா என்று கான் சாகிபு ராணுவ விதிகளையெல்லாம் மீறிக் கையில் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு, வெள்ளைத் தளபதியுடன் போட்டி போட்டுக் கொண்டு தீ மூட்டினான். என்னே அவனது கொடிய உள்ளம்! கோயில் கதவுகளைக் கொளுத்திய பின், ஏகாதிபத்தியப் படை ஆலயத்துக்குள் இருந்த அழகிய வெண்கலச் சிலைகளையெல்லாம் சூறையாடியது. அதைக் கண்டு கொதித்தெழுந்த அந்தணர்களுக்கு 5,000 ரூபாய் தருவதாகச் சமாதானம் பேசினான் ஹீரான். ‘அழிவு வேறு, அவமானம் வேறா?’ என்று அந்தணர்கள் ஆத்திரம் கொண்டனர். அதைப் பார்த்த கர்னல் ஹீரான், ‘திருச்சிக்குத் திரும்பியதும், நம் பட்டாளத்துக்குப் பணமாக்கிக் கொடுக்க நாம் வைத்திருக்கும் ஓட்டை, உடைசல், ஈயம், பித்தளைகளோடு, இந்த விக்கிரகங்களையும் போடுங்கள்’ என்று தெய்வச் சிலைகளைத் தூக்கி எறிந்தானாம்.

மதுரையில் தங்கள் படைகளை வைத்து விட்டுக் கர்னல் ஹீரானும், அவனுக்குத் துணையாக வந்த ஆர்க்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ் கானும் 1755-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி திருநெல்வேலி போய்ச் சேர்ந்தனர். அங்கிருந்து நாற்பது கல் தொலைவில் இருந்த நிலைக்கோட்டையைக் கைப்பற்றச் சாடினர். அந்த முயற்சியில் ஏகாதிபத்தியப் படை செய்த அட்டூழியங்கள் எழுத்தால்