பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வருணிக்க இயலாதவை. ஆடவர் என்றும், மகளிர் என்றும், படுகிழவர் என்றும், பச்சிளம் பாலகர் என்றும் பாராமல், கண்ணில் கண்ட உயிர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி, வேட்டையாடினர் வெள்ளை வெறியர்களும், அவர்களோடு வந்த புல்லியர்களும். ஏகாதிபத்தியத்தின் சார்பில் நடத்திய முதற் படையெடுப்பின் கொடுமையின் எல்லையைக் கண்டது இந்த இடந்தான். பிரிட்டிஷ் படையெடுப்பின் வன்மையைக் கண்டு நடுங்கினர் பாளையக்காரர் அனைவரும். அதன் பயனாக, அவர் தம் கப்பத் தொகை கர்னல் ஹீரான் காலடியில் குவிந்தது. அச்சமே நிறைந்திருந்த அந்நிலையிலும், அந்நியப் படையெடுப்பை எதிர்க்க இரண்டு உள்ளங்கள் துள்ளின. ஒன்று, பாஞ்சைத் தலைவனாகிய பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்முவின் உள்ளம். மற்றொன்று, மறவர் குல திலகமாகிய பூலித் தேவரின் பேருள்ளம். பொல்லாப் பாண்டிய கட்ட பொம்முவுக்கு ஆசை இருந்தது போல், ஆற்றல் இல்லை. அதனால் கர்னல் ஹீரானுக்குக் கப்பம் கட்டினார்; கருணையின்றித் தமக்கு வேண்டியவர்களையே, ஆள் பிணையாகக் கொடுத்துத் தலை வணங்கிப் போனார். ஆனால், நெற்கட்டுஞ் செவ்வல் பாளையத் தலைவராகிய பூலித் தேவரோ, ‘ஒரு ரூபாய் கூடக் கப்பம் தர முடியாது. உன்னால் ஆனதைப் பார்!’ என்று சொல்லிக் கர்னல் ஹீரானை நிலை குலையச் செய்து, பல நாள் முற்றுகையிட்டும் ஒரு பயனும் காணாமல், ஏமாற்றம் உற்ற நரி போல் மதுரைக்கு ஏகச் செய்தார்.