பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கான் சாகிபு தனக்கு முன்னே அவ்வூரில் ஆட்சி புரிந்த பார்க்கத்துல்லா என்பவனால் ஹிந்து ஆலயங்களுக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள், பாதகங்களையெல்லாம் நீக்கி, எல்லார் அன்பையும் பெற்றான்.

இந்நிலையில் பிரஞ்சுக்காரர்களால் மறுபடியும் ஏற்பட்ட ஆபத்தினின்றும், கருநாடகத்தைக் காப்பாற்ற அவனை ஆங்கிலக் கும்பினி திருச்சிக்குப் பெருத்த படையைச் சேர்த்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டது. பிரஞ்சுத் தளபதி லாலி 1757 மே மாதம் கடலூரையும், ஜூன் மாதம் ஆங்கிலேயரின் செயிண்ட் டேவிட் கோட்டையையும் கைப்பற்றினான். இவ்வாறு ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்க, ஜூன் 16-ஆம் தேதி கான் சாகிபு இரண்டாயிரம் சிப்பாய்களுடன் திருச்சி வந்து சேர்ந்தான். திருச்சி வந்த தேதி முதல், கான் சாகிபு ஆங்கிலக் கும்பினியின் அழிவுக்காக-அயராது-உழைத்தான். ஏறத்தாழக் காலாண்டுக் காலம் படாத பாடு பட்டு, ஆங்கிலக் கும்பினி வெற்றிக் கொடி உயர்த்தத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கினமைக்காகக் கும்பினியாரிடமிருந்து வைரம் பதித்த மோதிரம் உட்படப் பரிசுகள் பல பெற்றான். 1759-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி அவன் செலவுகளுக்காகக் கும்பினி மூன்று லட்ச ரூபாய் தந்தது. அவன் சொந்த முறையில் அனுபவிக்க முந்நூறு பகோடா நாணயங்கள் பெறுமான பட்டு வெல்வெட் ஆடைகளையும், ஏராளமான படைக்கருவிகளையும் பரிசாக அளித்தது.