பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொடக்கம்


குயில் பாட்டு நிகழ்ச்சி, புதுவைக்கு மேற்கேயுள்ள ஒரு மாஞ்சோலையில் நடக்கின்றது. சஞ்சீவி மலைச்சாரலில் நடக்கிறது பாரதிதாசனின் பாட்டு நிகழ்ச்சி, கவிஞர்கள் தத்தம் பாட்டு நிகழும் இடங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இந்த அறிமுகம் ஒரே மாதிரியாக இருக்கிறது. இடத்தின் இயற்கை நிலையை இரு கவிஞர்களும் அழகு ததும்ப வருணிக்கிறார்கள்.

இந்த அறிமுகம் அவர்கள் பாடப்போகும் போக்கையே அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நீலமணியொன்று நெருப்பின் எதிரில் வைத்தால் எப்படி ஒளி பொருந்தித் திகழுமோ அப்படி ஒளிபெற்றுத் திகழ்கிறது காலையிளங்கதிர் பட்ட நீலக்கடல்.

அந்த நீலக்கடல் வேதத்தின் கருத்தைப் பாடிக் கொண்டிருக்கும் அலைக் கைகளினால் கரையை மோதித் தழுவுகின்றது. இப்படிப்பட்ட வளமான கரைகளையுடைய புதுவை நகரின் மேற்கே சிறிது தொலைவில் ஒரு மாஞ்சோலை யிருக்கிறது. அந்தச் சோலையில் வேடர்கள் பறவை சுட வருவது வழக்கம். இப்படிப்பட்ட அழகிய பெருஞ் சோலையில், வேடர்கள் வராத ஒரு நல்ல நாளில் பெட்டைக்குயில் ஒன்று இனிய பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது.