பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

குயிலும்...சாரலும்

வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு
நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்.
(ச. பா. சாரல்)


தேர்ந்த கவிஞனுக்கு இலக்கணம் தடையாய் இருப்பதில்லை; நல்ல நடையைக் கொடுக்கும் என்பதற்கு இந்த இரு நூல்களுமே சான்று.

பெற்ற குழந்தை மூக்கும் விழியுமாய், பிஞ்சுக்கையும் காலும் பஞ்சுபோல் உடலும் கொண்டு ஒரு பூக்குவியலாய்க் காணும்போது தான் அதன் மீது யாருக்கும் அன்பு பிறக்கும், தாயும் தன் குழந்தை என்று பெருமையோடு தூக்கி மார்பில் அணைத்துக் கொண்டு முத்தமாரி பெய்து சித்தம் களிப்படைவாள்.

அதுவே குறைப்பேறாகி, வெறும் சதைக் கட்டியாய்ப் பிறந்து விட்டால் எந்தத் தாயும் அதை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டாள். இப்படியொரு பிண்டம் தன் வயிற்றில் பிறக்க என்ன பாவம் செய்தேனோ என்று துன்புறுவாள்.

ஆனால், இந்தப் புதுக்கவிதைக்காரர்கள் மட்டும், இயற்கைக்கு மாறுபாடாக, அரைகுறைப் பேறுகளைப் படைத்துவிட்டு ஆகா ஓகோ என்று துள்ளாட்டம் போடுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. முயற்சியில்லாமலும், பயிற்சியில்லாமலும் கவிஞர் என்ற பெயரைப் பெற்று விடவேண்டும் என்ற அறியாமையின் வயப்பட்ட இவர்களை எண்ணும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.