பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

29

அந்தச் சிறிது நேரத்திற்குள் அவன் வாடி விடுகின்றான். அவ்வளவு காதல் அவள் மீது. ஆவலோடு, நெஞ்சில் ஊறிச் சுமக்கின்ற காதலோடு கண்டதும் பாய்ந்தெழுந்து அப்படியே வாரியணைத்துக் கொள்ளத் தாவி வருகின்றான்.

“தொடாதீர்கள்!” என்று அவள் தடைவிதிக்கின்றாள். எப்படியிருக்கும் நெஞ்சு?

திடுக்கிடுகின்றான். இதயக்குரல் ஒலிக்கின்றது. துயரத்தோடு அவளை நோக்கிப் பேசுகின்றான். காதல் மொழிகள் பெருக்கெடுத்துக் கரைதட்டிக் கொண்டு பாய்ந்தோடி வருகின்றன.

கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ
டுண்ணப்போம் போது நீ ஓர் தட்டுத் தட்டிவிட்டாய்!
தாழச் சுடுவெய்யில் தாழாமல் நான்குளிர்ந்த
நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதே என்றாய் நேற்றுப்

பட்டிருந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?

என்று வேதனையோடு கேட்கின்றான்.

அவளோ, சஞ்சீவி மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்று மூலிகைகளைப் பறித்துக் கொடுக்குமுன் தன்னைத் தொடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றாள்.

புதுமைப் பெண்ணான அவளை வலியத் தழுவிக் கொள்ள வகையற்ற குப்பன் அவளைக் கெஞ்சுகின்றான்.

ஒரு முத்தமாவது கொடு என்று கேட்கிறான். மூலிகையைப் பறித்துக் கொடுத்தால் நூறு முத்தம் உறுதியாகக் கிடைக்கும்; அதற்குமுன்னே ஒன்று கூடக் கிடைக்காது என்று உறுதியாகச் சொல்லி விடுகிறாள்.