பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும்

பல்லாண்டு பல்லாண்டாய்த் தமிழர் நாட்டில்
      பாவானம் வெறும்வெளியாய் நீலம் பூத்தே
இல்லாமை நிலையெய்திக் கிடந்த போதில்
      எழுகதிர்போல் பாரதியார் தோன்றி வந்தார்.
சொல்லாண்டு நாட்டுமக்கள் நெஞ்சை யாண்டு
      சுடர்க்கவிகள் பலப்பலவாய்த் தோற்று வித்து
வல்லாண்மை யுணர்வெழுப்பி உரிமை வேட்கை
      வளர்த்திந்தத் திருநாட்டை உயரச் செய்தார்.

வேதாந்தம் பாடுகின்ற புலவர்; தெய்வ
      விளையாடல் பாடுகின்ற புலவர்; மாதர்
பாதாதி கேசங்கள், புகழ்ச்சி மாலை
      பல்விளித்துப் பாடுகின்ற புலவர், கற்றோர்
மூதேவி வளர்ப்பானார் என்று நெஞ்சம்
      முறிந்திருக்கும் புலவர்பரம் பரையில் நாட்டு
மாதாவைப் பாடுகின்ற; சக்தி யாக

      மாவீரர் பாரதியார் தோன்றி வந்தார்.