பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

குயிலும்...சாரலும்

வித்தகனாம் பாரதியின் வழியில் வந்தோர்
      விதவிதமாய்ப் புதுப்பாக்கள் குவிக்க லானார்
கத்தியின்றி ரத்தமின்றி என்ற நாமக்
      கல்லாரும் கவிமணியும் பாடு வோரின்
சித்தத்தில் இடம்பிடிக்கும் யோகி யாரும்
      சிதம்பரனார் பொதுவுடமை ஜீவா னந்தம்
இத்தனைபேர் மத்தியிலும் சுப்பு ரத்னம்
      இணையற்ற புரட்சிப்பா வேந்த ரானார்.

சீறுபுலி யனையதொரு தோற்றங் கொண்டோன்
      சினமுழக்கம் செய்தானேல் பகை நடுங்கும்
வீறுமிகு சொற்களினால் புரட்சிப் போரை
      விளைவிக்கும் ஆற்றலுளான் சுப்பு ரத்னம்
ஏறுபோற் பீடுநடைப் பார திக்கே
      யான் தாசன் யான் தாசன் என்று சொன்னால்
மாறுபடும் கருத்துடையார் அல்லர் என்றே
      மனங்கொண்டே இனங்கண்டு கொள்ள லாகும்.

கண்ணனையும் முருகனையும் காளியையும்
      கனிந்துருகிப் பாடுகின்ற பார திக்கோ
எண்ணத்தில் நாத்திகமே குடிகொண் டுள்ள
      இச்சிங்கம் எவ்வாறு தாசன் ஆனான்?
வண்ணத்துக் கவிபாடத் தெய்வ சக்தி
      வளமிருக்க வேண்டுமெனும் பார திக்கு
விண்ணளவு கற்பனையே நாத்தி கத்தால்

      விரித்துரைக்கும் புலவனொரு தாச னாமோ?