பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

63

குயில்பாட்டு பாரதிக்குப் பெருமை சேர்க்கும்
    கோலமிகும் அப்பாட்டுப் போற்ப டைத்த
மயில்ஆடும் சஞ்சீவி பர்வதத்தின்
    மலைச்சாரல் கதைதாசன் பெருமை யாகும்!
மயல்சேர்க்கும் கற்பனையாம் குயிலின் பாட்டு
    மற்றிந்தச் சஞ்சீவி மலைக் கதையோ
துயில்தீர்க்கும் பகுத்தறிவுக் கருத்து மிக்க

    துடிப்பான புத்தெழுச்சிக் கீதம் ஆகும்!


பாஞ்சாலி சபதத்தில் புதுமைப் பெண்ணின்
    பகுத்தறிவு வாதத்தைக் கேட்க லாகும்
நோஞ்சானாம் தர்மர்தனைச் சூதில் விற்கும்
    முறைகேட்டை எதிர்க்கின்ற புலியாகின்றாள்!
வாஞ்சையுடன் தன்மகற்குப் போர்ப் பயிற்சி
    வழங்குகின்ற வீரத்தாய் தாசன் காட்டும்
தேன் சுவையாம் கற்பனையில் காணுகின்றோம்

    திருநாட்டிற் பெண்ணினத்தின் எழுச்சி கண்டோம்


புதுக்கருத்தின் விடிவெள்ளி பார திக்குப்
    பொற்கதிராய்ப் பின்தோன்றும் தாசன் ஆவான்!
எதிர்க்கின்ற வீரத்தால் பழமை சாடி
    எழுச்சிமிகும் உலகத்தைப் படைக்கும் போக்கில்
நதிமூலம் பாரதியாம்; கடலிற் கூடும்
    காவிரியாம் தாசனிவன் என்ன லாகும்!
குதிகொள்ளும் புதுக்கருத்தை ஏற்று நிற்கும்

    கொள்கைக்கிவ் விருவருமே தலைமை யாகும்!

(நாச்சியப்பன் பாடல்கள்-தொகுதி. 2)