இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பா அம்மா யாரென்றே
அறியாய்ச் சிறுவன் கந்தன்தான்
தப்பா தெங்கும் சென்றேகித்
தன்கை நீட்டி யிரந்திடுவான்.
"ஐயா தருமம்!" எனப்பாடி
அலைந்து பிச்சை வாங்கிடுவான்
மெய்யாய் ஏற்ப திழிவென்னும்
மேலாங் கருத்தை அவனறியான்.
ஒருநாள் நல்ல திருநாளாம்
ஊர்க்கோ யிலிலே பெருந்திரளாம்
வருவாய் நிறையக் கிடைக்குமென
வந்தார் பிச்சைக் காரரெலாம்.
குருடன், நொண்டி, நோயாளி
குள்ளன், முடவன், பித்தனிவர்
வரிசை தனிலே குவளையுடன்
வந்து நின்றான் கந்தனுமே!
நெஞ்சில் ஈசன் நினைப்புடனே
நெருங்கி வந்த மனிதரெலாம்
பஞ்சப் பாட்டால் மனமிளகிப்
'பாவம்!' என்று காசளித்தார்.