பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

47

நடைமுறைப் படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

ஒரு தேசிய நிறுவனமான குருகுலத்தில் சமபந்தி உணவு தான் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால், குருகுலம், காங்கிரஸ் கட்சியின் நிறுவனம் அல்ல வென்றும், அதற்கு, தான் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை என்றும் ஐயர் கூறி விட்டார்.

இதை யறிந்ததும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவும், செயலாளர் பெரியார் ஈவேராவும் கூடி ஏற்கனவே கொடுத்த ஐயாயிரம் ரூபாய் தவிர, மறுபடியும் காங்கிரஸ் நிதியிலிருந்து கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்த மீதி ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். இந்த முடிவை யறிந்த மறுநாளே ஐயர், மற்றொரு செயலாளரான கே. சந்தானம் அவர்களிடமிருந்து மீதி ஐயாயிரம் ரூபாய்க்கான செக்கை இரகசியமாக வாங்கிக் கொண்டுவிட்டார்.

ஏற்கனவே குருகுலத்துக்கு நன்கொடையளிப்பதாக வாக்களித்திருந்த பெருமக்களை ஐயர் அணுகிய போது, சாதி வேற்றுமையை உருவாக்கும் நிறுவனத்துக்குத் தாங்கள் உதவத் தயாராக இல்லை என்று கைவிரித்து விட்டனர்.