பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

51

கொண்டதாகத் தெரியவில்லை என்றும் பலர் எடுத்துக் கூறினார்கள்.

பெரியார் குறுக்கிட்டு இரண்டாவது முறையாகத் தர வேண்டிய ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கக் கூடாதென்று செயற்குழு உறுப்பினர்கள் முடிவு செய்திருக்க, இணைச் செயலாளரான கே. சந்தானம் தமக்குத் தெரிவிக்காமல் செக் கொடுத்துவிட்டார் என்றும், அது கண்டனத்துக்குரியதென்றும் கூறினார்.

பார்ப்பன உறுப்பினர் ஒருவர் இடைமறித்து, “வ.வே.சு ஐயர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தக் தீர்மானிக்கப்பட்டது. பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வருணப் பாகுபாடும் சாதிப்பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேதவிதி முறைப்படி தானே ஐயர் நடந்து கொண்டிருக்கிறார். இதிலே என்ன தவறு?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் ஈரோட்டுப் பெரியார் சினங் கொண்டார்.

“சாதிப் பாகுபாட்டுக்கும் உயர்வு தாழ்வுக்கும் வேதமும் சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்!” என்றார்.