436 குறிஞ்சிமலர் 'இல்லை வேறு ஒரு வம்பு' என்று ஏதோ சொல்லி மழுப்பினான் அரவிந்தன். அப்போது வெளியிலிருந்து முருகானந்தமும் வந்து சேர்ந்தான். 'கொஞ்சம் மாடிக்கு வா! அரவிந்தன் உன்னிடம் தனியாக ஒன்று சொல்ல வேண்டும்" என்று முருகானந்தம் வந்ததும் வராததுமாகக் கூறியது அரவிந்தனின் கலக்கத்தை அதிகமாக்கியது.
ஊண் பழித்து உள்ளம் புகுந்து - என் உணர்வு அது ஆய ஒருத்தன்
- மாணிக்கவாசகர்
அரவிந்தனிடம் தனியாகப் பேச வேண்டுமென்று அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு போன முருகானந்தம் கூறலானான்; 'இப்போது நான் சொல்லப்போகிற இந்தச் செய்தியில் நீ அவ்வளவு அக்கறை காட்டமாட்டாய் என்பது எனக்குத் தெரியும், அரவிந்தன்! ஆனாலும் உன்னிடம் சொல்லி எச்சரிக்கை செய்து விட வேண்டியது என் கடமை. உனக்காக இல்லாவிட்டாலும் பூரணியக்காவுக்கும் எங்களுக்கும் வேண்டியாவது இதில் நீ கவனமாக இருந்துதான் ஆகவேண்டும்."
'செய்தியைச் சொல் அப்பா என்னவோ அடிப்படை பலமாகப் போடுகிறாயே?"
"வேறொன்றுமில்லை அரவிந்தன். தேர்தல் முடிகிற வரை நேரமில்லாத நேரங்களில் தனியாக, ஒண்டியாக நீ வெளியே அதிகம் நடமாட வேண்டாம். காலம் சரியில்லை. நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிற மனிதர்களும் சரியில்லை. கெட்ட எண்ணங்களோடு மதம்பிடித்து அலைகிறார்கள்.'
இதைக் கேட்டதும் முருகானந்தத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு மெல்லச் சிரித்தான் அரவிந்தன்.
'சிரிப்பதற்கு இது வேடிக்கை இல்லை. என் காதுக்குப் பலவிதமான செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் கேள்விப்பட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் உன்னைக் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிக்கிறேன். இது விளையாட்டுக்