பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இந்தப் படத்தில் என்உருவம்
இயல்பா யில்லை. அதனால்தான்
என்றன் நாயும் அதனருகில், -
இதுவரை செல்லா திருக்கிறது.”

என்றனர் மிகவும் சலிப்புடனே.
ஏன் இதைக் கூறினர்,அறிவீரோ?
அனைவர் கூலியைக் குறைத்திடவே
அப்படி ஒருபொய் உரைத்தனராம்.

"நன்றாய்த் திருத்தித் தருகின்றேன்.
நாளை மாலையில் வந்திடுவீர்.”
என்றார் அந்த ஓவியரும்,
ஏதோ மனத்தில் நினைத்தபடி.

மறுநாள் ரொட்டித் துண்டொன்றை
வாங்கி வந்தார் ஓவியரும்.
உருவப் படத்தில் தடவினரே,
ஒருவரும் காணா வகைதனிலே.

மாலையில் ஓவியர் வீட்டிற்கு
வந்தார் கனவான். வந்ததுமே,
வாலினை ஆட்டி அவர்படத்தை
மகிழ்வுடன் நாயும் நக்கியதே!

56