பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பற்றிப் படரக் கொம்பில் லாமல்
முல்லைக் கொடியுமே-காற்றில்
சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி
கண்டு தானடி.

தேரைக் கொடியின் அருகில் கொண்டு
செல்வ தேனடி?-அங்கே
சென்று கொடியைக் கையில் அவரும்
எடுப்ப தேனடி?
தேரின் மீது கொடியைப் படர
விடுகி றாரடி-அதன்
சிரமம் தீர்த்து மகிழ்ச்சி யோடு
நடக்கி றாரடி.

முல்லை படரத் தேரைக் கொடுத்த
வள்ளல் பாரிபோல்-அடியே,
மிகவும் நல்ல மனிதர் ஒருவர்
உண்டோ ? சொல்லடி.
இல்லை,இல்லை,இல்லை என்றே
சொல்கி றேனடி-நாம்
எங்கு தேடிப் பார்த்திட் டாலும்
கிடைத்தி டாரடி !