பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூழ்நிலை

75

ஒரு குழந்தைக்குக் கலைத் திறமை அமைந்திருக்கிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அது ஒரு சிறந்த ஓவியனாகலாம்; அதற்கேற்ற திறமைகள் பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அத்திறமையைப் பயிற்சியால் வளர்க்காவிட்டால் அது ஓங்கிப் பிரகாசிக்குமா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஓவியக் கலைக்கு வேண்டிய திறமை முழுவதும் இருக்கிறதென்றால் அக்குழந்தைக்கு அதன் வாழ்க்கையில் துாரிகை பிடிக்கவோ வர்ணத்தைக் குழைத்துத் தீட்டவோ சந்தர்ப்பமே வாய்க்காவிட்டால் அது ஒரு சிறந்த ஓவியனாக முடியுமா? முடியவே முடியாது.

சில குழந்தைகள் ஆச்சரியமாகப் பாடுகின்றன. கிராமப் பக்கங்களிலே போகும்போது அழகாகப் பாடுகின்ற ஒரு சில இன்டைப் பையன்களைப் பார்க்கிறோம். அவர்கள் பாடுகின்ற தெம்மாங்கும் நாடோடிப் பாடலும் நம் உள்ளத்தைக் கவர்கின்றன. ஆனால் அந்த அளவிலேயே அந்தப் பாட்டுத் திறமை நின்றுபோய் விடுகிறது. வயதாக ஆக மறைந்தும் போய்விடுகிறது. ஏனென்றால் அந்தத் திறமை நன்கு மலர்ச்சியடைவதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சூழ்நிலை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அத்திறமை வளரமுடியும். ஆதலால் தான் சில மனத்தத்துவர்கள் பாரம்பரியத்தை முக்கியமானதென்று ஏற்றுக்கொள்ளாமல் சூழ்நிலையையே வற்புறுத்துகிறார்கள்.

பாரம்பரியத்தால் பல திறமைகள் அமைகின்றன என்று கூறுவதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனத்திற் கொள்ளவேண்டும். பாரம்பரியம் ஒரு திறமையை முழுமையாக அப்படியே ஒருவனுக்குக் கொடுத்து விடுவதில்லை. ஒருவனுக்கு ஆயிரம் ரூபாயைப் பையில் போட்டுக் கட்டிக் கொடுப்பதுபோலப் பாரம்பரியம்