பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் கெடிலம்

107


"பூவலர் சோலை மணமடி புல்லப் பொருண் மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக்
கடந்தணைந்தார்” (136)

கெடிலத்தின் நீர்வளத்தையும், அது பொன்னும் மணியும் பொரு கரியின் மருப்பும் மின்னும் வெண்முத்தும் மணநாறும் மலர்களும் மரத்துண்டங்களும் உந்தி உருட்டி வருவதையும் பாடி ஆவல் தீர்வதில் சேக்கிழாரும் பின் தங்கவில்லை. ‘திருக்கெடிலம்’ எனக் கூறி அதன் தெய்வ மங்கலத்தைப் போற்றியுள்ளார். சேக்கிழார்க்குக் கெடிலம் திருக்கெடிலம் மட்டுமன்று - அது செல்வக் கெடிலமாம் - காவல் கெடிலமாம் - செல்வத் திருக்கெடிலமாம் - காவல் திருக்கெடிலமாம் - காவல் செல்வத் திருக்கெடிலமாம் - இத்துணை அரும் பெரும் பொருள் ‘காவல் செல்வத்திருக்கெடிலம்’ என்னும் தொடரில் பொதிந்து செறிந்திருப்பதைக் கண்டு மகிழலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பர் பெருமானின் கருத்தை அடியொற்றி, ‘தென் திசையில் கங்கையெனும் திருக்கெடிலம்’ எனக் கெடிலத்தைக் கங்கையோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பெருமை செய்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

அருணகிரிநாதர் தமது முதல் திருவதிகைத் திருப்புகழின் ஈற்றில் பின்வருமாறு கெடிலத்தின் வளப்பெருக்கைப் புனைந்து புகழ்ந்துள்ளார்:

"திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும் வயற் கதிரலையத் திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடில நதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே"

இப் பாடற் பகுதியால் கெடிலக்கரையின் சோலை வளங்களும் வயல் வளங்களும் தெரியவருகின்றன. புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடி வருகிறதாம்; அப்போது உழவர்கள் ‘திமிதிம்’ எனப் பறை கொட்டி முழக்குகிறார்களாம். என்ன அழகு! என்ன வியப்பு! கோடை கழிய, கொண்டல் பொழிய, ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்தோடி வரும்போது, உழவர்கள் மழிச்சிப் பெருக்கெடுத்துப் பறை முழக்கிப் பூசனை புரிந்து ‘புதுப் புனல் விழா’ நிகழ்த்துவது பண்டைய மரபு அதனைத்தான் இப் பாடலில் அருணகிரியார் அறிவித்துள்ளார்.