பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. கெடில நாடு

காவிரி பாயும் நிலப்பகுதியைக் ‘காவிரி நாடு', ‘புனல் நாடு’ என்றெல்லாம் அழைப்பது மரபு. அதுபோல, கெடிலம் பாயும் பகுதியைக் ‘கெடில நாடு’ என்று நாம் அழைக்கலாம். இப் பெயர் புதுப்பெயர் அன்று. கெடில நாடு என்னும் பெயரை, நம் இருபத்தைந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டனார் ஒருவர் முன்னமேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர்தாம் திருநாவுக்கரசர், அவர் தமது தேவாரத்தில் பன்னிரண்டாம் திருவதிகைப் பதிகத்தில் இரண்டிடங்களில் ‘கெடில நாடர்’ எனவும் பதினைந்தாம் திருவதிகைப் பதிகத்தில் ஏழிடங்களில் ‘கெடில நாடன்’ எனவும் இறைவனைக் குறிப்பிட்டுள்ளார். ‘காவிரி நாடு’ என்னும் பெயர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்பரால் சோழ நாட்டிற்கு இடப்பட்ட பெயராகும். ஆனால், கெடில நாடு என்னும் பெயரோ, ஆறாம் நூற்றாண்டிலேயே நாவுக்கரசரால் கெடிலம் பாயும் பகுதிக்கு இடப்பட்ட பெயராகும். எனவே, கெடிலநாடு என்பது, காவிரிநாடு என்பதனினும் அறுநூறு ஆண்டுகள் முற்பட்ட பழமையுடைய பெயராகும். இந்தக் கெடில நாடு என்ற பெயருக்கு உரியது முழுவதும் தென்னார்க்காடு மாவட்டமே. கெடிலத்தின் தோற்றம், ஓட்டம், முடிவு அத்தனையும் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே நிகழ்கின்றன அல்லவா? கெடில நாடு என்னும் பெயர் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு உரியது என்றாலும், சிறப்பாக, தென்னார்க்காடு மாவட்டத்தின் நட்டநடுவேயுள்ள கள்ளக் குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களும் சேர்ந்த பகுதிக்கே மிகவும் உரித்து. இந்த மூன்று வட்டங்களில் தானே கெடிலத்தின் தோற்றமும் போக்கும் முடிவும் நிகழ்கின்றன? இருப்பினும், வரலாற்று ஆராய்ச்சிக்குள் புகும் நாம் இந்த மூன்று வட்டங்களை மட்டும் தனியே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது. சுற்றுப் புறச் சூழல்களையும் இணைத்தாற்போல், பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டம் முழுவதையும் மையமாகக் கொண்டே ஆராய்ச்சியைத் தொடங்கவேண்டும்.

மலையமா னாடு

தென்னார்க்காடு மாவட்டப்பகுதி சங்ககாலத்தில் ‘மலைய மானாடு’ எனவும் ‘மலைநாடு’ எனவும், ‘மலாடு’ எனவும்