பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

133


கர்நாடக நவாப்புகள்

தேசிங்குக்குப் பின் தென்னார்க்காடு மாவட்டம் மீண்டும் முசுலீம் ஆணையரின் கீழ் வந்தது. 1732 ஆம் ஆண்டுகால அளவில் சதத்துல்லாகான் காலமானதும், அவருடைய வளர்ப்பு மகன் தோஸ்து அலி என்பவர் 1732இல் கர்நாடக நவாப்பாகப் பட்டமேற்று 1740 வரை அரசாண்டார். அவர் மகன் ‘சப்தர் அலி’ 1740 இல் ஆட்சிக்கு வந்தார். 1742இல் முர்தாஜ் அலி என்னும் கீழ் ஆணையன் சப்தர் அலியைக் கொன்று தன்னை நவாப் ஆக்கிக் கொண்டான். ஆனால், படை வீரர்கள் அவனை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி சப்தர் அலியின் மகனான சாகிப் ஜெக்தா என்னும் மறுபெயருடைய முகமது சையத்தை நவாப் ஆக்கினர். பின் 1743இல் காஜா அப்துல்லாகான் நவாப் ஆக்கப்பட்டார். சில நாளில் அவர் இறந்து போக, அன்வர் உத்தீன் என்பவர் நவாப் பட்டமேற்றார். இந்த நவாப்புகளை அமர்த்துவதிலும் வீழ்த்துவதிலும், தக்கணத்தின் பெருந்தலைவராகிய நிசாம் - உல் - முல்க் பெரும்பங்கு கொண்டிருந்தார்.

1748 இல் ஐதராபாத் நிசாம் - உல் - முல்க் காலமானார். அவருக்குப்பின் அவர் மகன் ‘நாசிர் ஜங்’ என்பவருக்கும் பேரன் ‘முசாபர் ஜங்’ என்பவருக்கும் இடையே பதவிப் போட்டி ஏற்பட்டது. இங்கே ஆர்க்காட்டில் அன்வர் உத்தீனுக்கு எதிராக, சந்தா சாகிப் என்பவர் கிளம்பினார். சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பிரெஞ்சுத் தலைவர் டூப்ளேயின் துணையுடன் பொருது தாம் எண்ணியதை முடித்தனர். அன்வர் உத்தீன் 1748 இல் கொல்லப்பட, சந்தா சாகிப் கர்நாடக நவாப் ஆனார். அங்கே முசாபர் ஜங் ஜதராபாத் நிசாம் ஆனார். இந்நிலையில் நாசிர் ஜங்கும், அன்வர் - உத்தீன் மகன் முகமது அலி என்பவரும் ஆங்கிலேயரின் துணை நாடினர்; எண்ணியதை முடித்தனர். ஆர்க்காட்டில் முகமது அலியும், ஜதராபாத்தில் நாசிர் ஜங்கும் பதவியைப் பிடித்துக் கொண்டனர். இவர்களை அகற்றி மீண்டும் சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பதவிக்கு வந்தனர். நாசிர் ஜங் கொல்லப்பட்டார். பின்னர் முசாபர் ஜங்கும் கொல்லப்பட்டு ‘சலாபாத் ஜங்’ என்பவர் நிசாம் ஆக்கப்பட்டார். இறுதியாக, சந்தா சாகிப் கொல்லப்பட்டு முகமது அலி கருநாடக நவாப் ஆக்கப்பட்டார்.

மைசூர் முசுலீம் குறுக்கீடு

நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில், மைசூரை ஆண்ட ‘ ஐதர் அலி’ என்னும் முசுலீம் மன்னர் 1780 இல்