பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. கெடிலக்கரை அரசுகள்

கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டை வரலாற்றுக் காலந்தொட்டு கி.பி. இருபதாம் நூற்றாண்டுவரை அரசாண்டுவந்த மன்னர்கள் குறித்தும் அவர்தம் மரபுகள் குறித்தும் முறையே முன் பகுதியில் (கெடில நாட்டு வரலாறு) பொதுவான குறிப்புக்களே சுருக்கமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அம் மன்னர்கள் வரிசையில், திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசாண்ட மன்னர்களேயன்றி, தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்தும், பாரதத்தின் வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் வேறு (ஐரோப்பா) கண்டத்திலிருந்தும் வந்து அரசோச்சிய பேரரசர்களும் இடம் பெற்றுள்ளனர். இனி இந்தப் பகுதியில், திருமுனைப்பாடி நாட்டிலேயே (தென்னார்க்காடு மாவட்டத்தில்) பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசோச்சிய திருமுனைப்பாடி நாட்டு மன்னர்கள் சிலரைப் பற்றிய வரலாறுகள் முறையே சங்க காலந்தொட்டுக் கொடுக்கப்படும்.

இம்மன்னர்களுள், கெடிலம் ஆற்றிற்கு வடக்கே (6 மைல்) 10 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோவலூரைத் தலைநகரமாகக் கொண்டு செங்கோலோச்சிய மன்னர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். சங்க நூல்கள், பிற்கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வரலாற்று நூல்கள் ஆகியவை கெடிலக்கரை அரசுகளைப் பற்றி அறியத் துணை செய்கின்றன.

சங்க காலத்திலேயே சீர்சால் மன்னர்களால் கெடிலக் கரை நாடு மிகவும் சிறப்புற்றும் செழிப்புற்றும் திகழ்ந்தமையைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றனவெனில், கெடிலக்கரை நாகரிகத்தின் மாண்பு எத்துணையது என்பதை உய்த்துணரலாம்! கெடிலக் கரைக்குப் பெருமை தேடித்தந்த அம்மன்னர்களின் வரலாறுகள் வருமாறு: