பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

கெடிலக்கரை நாகரிகம்


“நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே. புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழா அன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே."

‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது.'(46)

இந்தப் பாடலின்படி, மலையமான் மக்களைக் கிள்ளி வளவன் கொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததென்றால், இதற்கு முன்னமேயே தந்தை மலையமான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகும். இந்த மலையமான், கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கருதப்படும் ‘ மலையமான் திருமுடிக்காரி’ என்னும் மலையமானா? - அல்லது - மலையமான் மரபைச் சேர்ந்த வேறொரு மலையமானா? - என்பது தெளிவுபடுத்தப்படவில்லை யாயினும், அவன் மலையமான் காரியாகத்தான் இருக்க வேண்டும்.

அதியமான் வெற்றி

மற்றும், அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன் திருக்கோவலூரை வென்றதாக ஒரு செய்தி, அதியமானை ஔவையார் பாடியுள்ள,


             பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
             முரண்மிகு கோவலூர் நூறிநின்
             அரண்டு திகிரி ஏந்திய தோளே’’

‘அதியமான் - கோவலூர் எறிந்தானை ஔவையார் பாடியது’

என்னும் புறநானூற்றுப் (99) பாடல் பகுதியால் தெரிய வருகிறது. அதியமானால் வெல்லப்பட்ட திருக்கோவலூர் மன்னன் யார்? என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. அவன் காரியாகத்தான் இருக்கக்கூடும்.

எப்படியிருந்த போதிலும், சங்க காலத்தில், மலையமான் திருமுடிக்காரி சிறந்த கொடை மறவனாயம் படை மறவனாயும் திகழ்ந்து திருமுனைப்பாடி நாட்டை ஆண்டான் என்பது தெளிவு.