பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

கெடிலக்கரை நாகரிகம்


அறிஞர்களின் படைப்புக்களோடு ஒத்த தகுதி உடையவை எனவும் போற்றப்படுகின்றன.

வேங்கட நாதர் தமிழ்மொழிக்காக ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரிய பெறுமானம் உடையது. தமிழில் பல நூல்கள் இயற்றியிருப்பதோடு இவரது தமிழ்த் தொண்டு அமைந்துவிட வில்லை; அதனினும் மிக்கது இவரது தமிழ்த் தொண்டு. இவர் செய்திருப்பது போன்ற செயல்களை இக் காலத்தினர் சிலர் ‘தமிழ் வெறி’ என்று கூட சொல்லக் கூடும். ‘வடமொழியே உயர்ந்தது - தமிழ் தாழ்ந்தது’ என்று பலர் எண்ணியும் பேசியும் எழுதியும் வந்த சூழ்நிலையில், “வடமொழிக்குத் தமிழ்மொழி எவ்வகையிலும் குறைந்ததில்லை; வடமொழி போன்றே தமிழ் மொழியும் மிகவும் உயர்ந்த மொழி; தமிழில் ஆழ்வார்கள் அருளியுள்ள பாடல்கள், வடமொழியிலுள்ள வேதங்களுக்கு ஒப்பான பெருமை உடையவை; அவை தமிழ் வேதங்கள் எனப்படும்” என்றெல்லாம் அடித்துப் பேசியும் எழுதியும் தமிழின் பெருமையை நிலைநாட்டினவர் வேங்கடநாதர். திருவரங்கப் பெருமான், இவரது தமிழ் அன்பையும் அறிவையும் அறிந்து வியந்து இவருக்கு ‘உபய வேதாந்தாசாரியர்’ என்ற விருதுப் பெயரை ஈந்ததாகக் கூறுவர். உபயம் என்றால் இரண்டு. அஃதாவது, ‘இருமொழிகளிலும் வல்ல வேதாந்த ஆசிரியன் என்பது அதன் பொருள். அதிலிருந்து இவர் வேதாந்த ஆசாரியர் எனவும் வேதாந்த தேசிகர் எனவும் அழைக்கப்படலானார். தேசிகர் என்றால் ஆசாரியர். தேசிகர் என்னும் பெயர் பொதுவாக ஆசாரியார்கள் அனைவர்க்கும் உரித்தான பெயர் என்றாலும், இவர் பிறந்தபின் இவரையே குறிக்கும் சிறப்புப்பெயராக மிளிர்கிறது. இஃதொன்றே இவர் பெருமைக்குப் போதிய சான்று பகரும்.

வேதாந்த தேசிகரின் தமிழ்த்தொண்டு இம்மட்டோடும் நின்று விடவில்லை. பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களைப் பூசனையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பலர் செய்த எதிர்ப்புகளுக்கிடையே, அவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என வாதிட்டு வெற்றியும் பெற்றார் வேதாந்த தேசிகர். இப்போது கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களும் நடமாடுவதைக் காணலாம். இவர் இன்னொரு புரட்சியும் செய்துள்ளார். தேவியைவிட்டுத் திருமாலை மட்டும் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தவர்களிடையே “திருமகளும் திருமால் போலவே வழிபடற்கு உரியவள், திருமகளும் சேர்ந்தே திருமால் தெய்வமாவார்; திருமகள் இல்லாத திருமால் வழிபாடு தெய்வ வழிபாடாகாது” என்ற உண்மையையும் (தத்துவத்தையும்) நிலைநாட்டினார். தேசிகர் பெண்ணின் பெருமையை மிகவும் உணர்ந்தவர் போலும்.