பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

181



வடகலை வைணவர்கள் தேசிகரின் எல்லாக் கொள்கைகளையும் பின்பற்றுகின்றனர்; தென்கலை வைணவர்கள் ஒரளவு ஒப்புக் கொள்கின்றனர். நூறாண்டு வாழ்ந்த தேசிகர் இறுதி வரையும் இல்லறத்தாராகவே திகழ்ந்தார். இறையன்புக்குத் துறவறம் ஒன்றே ஏற்ற வழி என்பது இல்லை என இவரது வாழ்க்கையால் அறியலாம். வரதாசாரியர் என்னும் மைந்தர் ஒருவர் இவருக்கு இருந்தார். தேசிகர் பாரத நாடு முழுதும் பயணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் 1369ஆம் ஆண்டு இறையடி எய்தினார். இவரைப் பற்றிய சிறப்புக்களை, குருபரம்பரை என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.

வேதாந்த தேசிகராலும் கெடிலக்கரை மிகுந்த பெருமை பெற்றுள்ளதன்றோ? இவர் வாழந்து வந்த இருப்பிடம், ‘வேதாந்த தேசிகர் மண்டபம்’ என்னும் பெயருடன் இவர் நினைவுக் குறியாகத் திருவயிந்திரபுரத்தில் திகழ்வதை இன்றும் காணலாம்.

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருவண்ணாமலையில் பிறந்தார். இப்போது வடார்க்காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணா மலையும் திருவண்ணாமலை வட்டமும் (தாலுகாவும்) முதலில் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே அமைந்திருந்தன. மற்றும் தொன்று தொட்டு திருவண்ணாமலை நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததாகவே புலவர் பெருமக்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில், அருணகிரிநாதரும் இந்த நாட்டுப் பெருமக்கள் வரிசையில் இடம் பெற்று இந் நாட்டிற்கு மிக்க பெருமையளிக்கிறார்.

திருப்புகழ் என்னும் இயல் - இசைத் தமிழ்ச் செல்வத்தை நாட்டிற்கு வழங்கிய பெருமகனாரான அருணகிரிநாதர், வாழ்க்கையில் பட்டுத் தேறியவராகக் கருதப்படுகிறார். இளமையில் கூடாவொழுக்கம் கொண்டதால் குட்ட நோயுற்று வருந்தினார் எனச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் வடகோபுரத் தருகில் தவங்கிடந்ததாகவும் இறையருள் விரைவில் கிட்டாததால் கோபுரத்தின்மேல் ஏறிக் குதித்ததாகவும் முருகப்பெருமான் தாங்கி அருள்புரிந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

அருணகிரியார் ஆறுமுகக் கடவுளால் ‘முத்தைத்தரு’ என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுப் பாடத்