பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கெடிலக்கரை நாகரிகம்


மின்விசிறியைவிட்டு அகலாதிருக்கும் பெருமக்கள் நிறைந்த இவ்வுலகில், அடிகளார் ஒரே நாளில் ஒரே மூச்சாக ஐந்து மணிநேரம் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவது வழக்கம். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவார். யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றலாம் - ஆனால், கேட்பதற்கு ஆட்கள் வேண்டுமே! மக்கள் ஐந்து மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்பதென்றால், மிகவும் கவர்ச்சியான, சுவையான பயன்மிக்க கருத்துக்களை வரையாது வாரி வழங்க வேண்டுமல்லவா? அதைத்தான் அடிகளார் செய்து வந்தார்.

ஒரு நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி இரவு பத்து மணி வரையும் சொற்பொழிவாற்றுவதோடு அடிகளாரின் பணி அமைந்துவிட்டதா? இல்லையில்லை. நாடோறும் முற்பகலிலும் பிற்பகலிலும் இடையறாது மாறி மாறி வரும் மாணாக்கர்கட்கு மணிக் கணக்கில் பாடம் கற்பிப்பதில் அடிகளார் பொழுதைச் செலவிடுவார். மாணாக்கர் குழுவில் எளிய இளைஞர்களும் இருப்பர்; அரசாங்க உயர் அலுவலர்களும் இருப்பர். சொற்பொழிவாற்றும் நேரம் போக பாடங் கற்பிக்கும் நேரம் போக - எஞ்சிய நேரங்களிலும் இடையறாது பலர் வந்து அடிகளாருடன் உரையாடிக் கொண்டிருப்பர். ஒவ்வோர் உரையாடலும் ஒரு பாடம் போலவே - ஒரு சொற்பொழிவு போலவே சுவை மிக்கதாய் - பயன் நிரம்பியதாயிருக்கும். தமிழை அடிகளாரின் திருவாயிலிருந்து கேட்க வேண்டும். உரையாடும் போதும், வழுவற்ற கொச்சையில்லாத செவ்விய இலக்கண நடையிலேயே அடிகளார். பேசுவார். இத்தகு பயன் செறிந்த உரையாடல்களும் பாடங்களும் சொற்பொழிவுகளும் திருப்பாதிரிப் புலியூரில் மட்டுமன்று - அடிகளார் செல்லும் ஊர்களில் எல்லாம் நடக்கும். ஒராண்டல்ல - ஈராண்டல்ல - தமது வாணாள் முழுதும் அடிகளார் இந்த அருட்பணியை ஆற்றிவந்தார்கள்.

சைவமும் தமிழும் தழைக்க அடிகளார் பல ஊர்களில் தமது தலைமையில் பல கழகங்கள் தோற்றுவித்துள்ளார்கள். 1900ஆம் ஆண்டு மடத்தில் ‘வாணி விலாசசபை’ அமைத்தார்கள்; பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் வாயிலாக மதுரையில் 24-5-1901ஆம் நாள் தமிழ்ச் சங்கம் தோன்றச் செய்தார்கள்; சென்னை சைவசித்தாந்த மகா சமாசம் 7-7-1905ஆம் நாள் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டது. திருப்பாதிரிப் புலியூர் உட்படப் பல விடங்களில் அடிகளார் மாநாடு நடத்தினார்கள்; பல கழகங்களின் ஆண்டு