பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

கெடிலக்கரை நாகரிகம்



இப்படியொரு கல்விக் கடல் - அறிவுக் கதிர் - குணக் குன்று தன்னிடத்தே திகழக் கெடிலக்கரை நாடு மிகவும் கொடுத்து வைத்ததுதான்! கெடிலக்கரைக்குப் பெரும் புகழ் ஈட்டித்தந்த ஞானியார் அடிகளார் 1-2-1942இல் 69ஆம் வயதில் இறைவனடி எய்தினார்கள். அடிகளாரின் திருவுருவத் தோற்றத்தை முன் படத்திலும் முருகன் கோயிலுடன் கூடிய அவர்தம் திருமடத்தின் ஒரு பகுதியைப் பின்வரும் படத்திலும் காணலாம்.

பல்வேறு பெருமக்கள்

இதுகாறும் இப் பகுதியில், தன்னிடம் பிறந்தும் - வளர்ந்தும் - வந்து நிலையாகத் தங்கி வாழ்ந்தும் அருட்பணி புரிந்த பெருமக்களால் திருமுனைப்பாடி நாடு பெற்ற பெரும்பேறு விளக்கப்பட்டது. இஃதன்றி, தன்பால் அவ்வப்போது வந்து சென்ற பெருமக்கள் பலரால் திருமுனைப்பாடி நாடு பெற்றுள்ள பெருமைக்கும் குறைவில்லை. திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பட்டினத்தார் முதலிய பெருமக்கள் பலர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பல ஊர்கட்கும் வந்தருளி இறைவனை வழிபட்டுப் பாடல்கள் பல பாடி நாட்டிற்குப் பெருமையளித்துள்ளனர். சமயப் பெரியார்களாகிய இவர்களன்றி, திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்த புலவர் பெருமக்கள் பலரும் அண்டைப் பகுதிகளிலிருந்து வந்த புலவர் பெருமக்கள் பலரும் திருமுனைப்பாடி நாட்டு ஊர்களின் மேல் பல இலக்கியங்கள் இயற்றியருளி நாட்டின் புகழைப் பெருக்கியுள்ளனர். இவர்களேயன்றி, திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெருமை தேடித்தந்ததில் பல்வேறு கலைஞர்கட்கும் பங்கு உண்டு. அனைவருடைய புகழும் திருமுனைப்பாடி நாட்டின் புகழுடன் ஒருசேர வாழ்க!