பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை இலக்கியங்கள்

201



இந்த ஊர்களேயன்றி, நடு நாட்டில் இன்னும் பல ஊர்களில் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார்; அவருடைய பதிகங்கள் பல கிடைக்கவில்லை என்ற செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் பதிகங்களிலும் சில பாடல்கள் கிடைக்கவில்லை. திருவதிகைப் பதிகங்களில் எட்டுப் பாடல்களும், திருமுண்டிச்சுரம் பதிகத்தில் ஒரு பாடலும், திருத்தூங்கானை மாடம் பதிகத்தில் ஏழு பாடல்களும் கிடைக்கவில்லை. வடார்க்காடு மாவட்டத்தில் பல பகுதிகள் தொண்டை நாட்டைச் சார்ந்தன வெனினும் திருவண்ணாமலை திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டைச் சேர்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்பட்டு வந்துள்ளது. இப்போது வடார்க் காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணாமலை வட்டம் முன்பு ஒரு கால் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் இருந்தது என்பதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது. இதனால்தான் அறிஞர்கள் திருவண்ணாமலைத் தேவாரத்தை நடு நாட்டுப் பதிகங்களுள் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களேயன்றி, நடு நாட்டிலுள்ள திருத்தினைநகர், திருமாணிகுழி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்கட்கும் திருநாவுக்கரசர் சென்று இறைவனை வழிபட்டதாகப் பெரியபுராணத்தில் சேக்கிழார் இதரிவித்துள்ளார். அவ்வூர்களின் பதிகங்கள் அகப்படவில்லை. அவர் பிறந்த திருவாமூர்ப் பதிகமே கிடைக்கவில்லையே! நாவுக்கரசர் மொத்தம் பாடியிருப்பவை இவ்வுளவு - இப்போது கிடைத்திருப்பவை இவ்வளவு என முன் ஓரிடத்தில் கூறியிருப்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

மற்றும், நடு நாட்டில் கடலூர் வட்டத்திலுள்ள ‘நல்லாற்றுார்’ என்னும் ஊருக்கும் அப்பர் பெருமான் சென்று வழிபட்டுள்ளார் என்னும் குறிப்பை, அவரது ‘அடைவுத் திருத்தாண்டகம்’ என்னும் பதிகத்திலுள்ள பின்வரும் பாடலால் அறியலாம்:

“பிறையூரும் சடைமுடியெம் பெருமானாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றுாரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஒத்தூரும் ஊற்றத்தூரு
மளப்பூரோ மாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோமூர்தானும்
துடையூரும் தொழவிடர்கள் தொடராவன்றே”