202
கெடிலக்கரை நாகரிகம்
இந்த நல்லாற்றூர் மேலும் நாவுக்கரசர் முழுப் பதிகம் பாடியிருக்கக் கூடும். இப்படியாகத் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களுள் சென்றன போக நின்றனவாக உள்ளவை, கெடிலக்கரை இலக்கியங்களுள் சங்க இலக்கியப் பாடல்கட்கு அடுத்தபடி பலவகையிலும் முதன்மை உடையனவாகும். அப்பர் தேவாரத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியும் நடுப்பகுதியுமாகும்.
நாவுக்கரசர் நடு நாட்டில் பாடியிருப்பனவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களின் பதிகங்களேயன்றி, அவர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும் சமணர்கள் அவரைப் பல்லவ மன்னனிடம் வருமாறு அழைத்தபோது அவர் அஞ்சாது பாடியதாகக் கூறப்படும் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று தொடங்கும் பதிகமும், அவரை நீற்றறையில் இட்டபோது பாடியதாகக் கருதப்படும் “மாசில் வீணையும்” என்று தொடங்கும் பதிகமும், அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டபோது பாடியதாகச் சொல்லப்படும் “சொற்றுணை வேதியன்” என்று தொடங்கும் பதிகமும் இன்ன சிலவும் அப்பர் அடிகள் கெடில நாட்டில் இருந்துகொண்டு பாடியனவேயாம்.
சம்பந்தர் தேவாரம்
நடு நாட்டில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப்பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும், திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். சம்பந்தர் தேவாரம் 1, 2, 3ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் நினைவுகொள்ளத்தக்கது.
ஊர் | மொத்தப் பதிகம் | மொத்தப் பாடல் | திருமுறை எண் |
---|---|---|---|
திருவெருக்கத்தம் புலியூர் | 1 | 10 | 1 |
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) | 7 | 72 | 1, 2, 3 |
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) | 1 | 11 | 1 |
நெல்வாயில் அரத்துறை | 1 | 11 | 2 |
திருச்சோபுரம் (தியாகவல்லி) | 1 | 11 | 1 |