பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கெடிலக்கரை நாகரிகம்



சுந்தரர் தேவாரம்

நடுநாட்டில் சுந்தர மூர்த்தி தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும் முறையே கீழே தரப்படும். சுந்தரர் தேவாரப் பாடல்கள் அனைத்தும் ‘ஏழாம் திருமுறை’ எனும் ஒரே திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

ஊர் மொத்தப் பதிகம் மொத்தப் பாடல்
திருவெண்ணைய் நல்லூர் 1 10
திருநாவலூர் 1 11
திருத்துறையூர் 1 11
திருவதிகை 1 10
திருத்தினை நகர் 1 10
திருக்கூடலை யாற்றுார் 1 10
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 3 31
திருவாமாத்துர் 1 11
திருவிடையாறு 1 10
நெல்வாயில் அரத்துறை 1 10

இவையேயன்றி, நடுநாட்டில் திருமாணிகுழி முதலிய திருப்பதிகட்கும் சுந்தரர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால், திருமாணிகுழி பதிகம் கிடைக்கவில்லை. திருமுதுகுன்றம் - மூன்றாம் பதிகத்தின் இறுதிப் பாடல் முழுதும் கிடைக்கவில்லை. இப்படியாக மூவர் தேவாரங்களிலும் பல பதிகங்களையும் பல பாடல்களையும் நாம் இழந்திருப்பது தீப்பேறே.

சுந்தரர் மேற்கூறிய நடுநாட்டு ஊர்கட்குத் தனித்தனியே பதிகம் பாடியிருப்பதன்றி, வேறு ஊர்ப் பதிகங்களில் திருக்கோவலூரை எடுத்தாண்டு பாடியுள்ளார். திருநாவலூர்ப் பதிகத்தின் ஆறாம் பாடலில்,

"கோட்டம் கொண்டார் குடமூக்கிலும்
கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார்”

எனவும், திருப்பரங்குன்றப் பதிகத்தின் முதல் பாடலில்,