பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

கெடிலக்கரை நாகரிகம்



இந்த அட்டவணையைப் பார்க்குங்கால், சிதம்பரம் வட்டத்தில் திருக்கூடலையாற்றுார் தவிர வேறு ஊர்கள் நடுநாட்டில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. காரணம், சிதம்பரம் வட்டம் இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் சேர்ந்திருந் தாலும், முன்பு சோழ நாட்டில் சேர்ந்திருந்தமையேயாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களுள் பல, வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. நெல்வாயில் அரத்துறை திருவரத்துறை எனவும், திருத்துங்கானை மாடம் பெண்ணாகடம் எனவும், திருவெருக்கத்தம் புலியூர் இராசேந்திரன் பட்டணம் எனவும், திருத்தினை நகர் தீர்த்தன நகர் எனவும், திருச்சோபுரம் தியாகவல்லி எனவும், திருநாவலூர் திருநாம நல்லூர் எனவும், திருமுதுகுன்றம் விருத்தாசலம் எனவும், அறையணி நல்லூர் அரகண்ட நல்லூர் எனவும் வடுகூர் திருவாண்டார் கோயில் எனவும், திருமுண்டீச்சுரம் கிராமம் எனவும், திருப்புறவார் பனங்காட்டூர் பனையபுரம் எனவும், அரசிலி ஒழுந்தியாப்பட்டு எனவும், அழைக்கப்படுகின்றன. முன்னவை தேவாரப் பதிகங்களில் உள்ள பெயர்கள்; பின்னவை உலக வழக்கில் இன்று உள்ள பெயர்கள். குழப்பத்திற்கு இடமின்றிப் பெயர்களைத் தெளிந்து கொள்ள வேண்டும். திருக்கோவலூர் வட்டத்தில் கிராமம் என அழைக்கப்படும் திருமுண்டீச்சுரம் என்னும் ஊரை அவ்வாறு கொள்ளாமல், கடலூர் வட்டத்திலுள்ள திருக்கண்டீசுரம் என்னும் ஊர்தான் அஃது எனச் சிலர் கூறுகின்றனர்.

இத்தனை ஊர்த் தேவாரப் பதிகங்களும் கெடிலக்கரை இலக்கியச் செல்வங்களாகும்.

ஆழ்வார் பாடல்கள்

ஆழ்வார் பன்னிருவராலும் பாடப் பெற்றுள்ள வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டு உள்ளன. பாடல் பெறுதல் என்பதை ‘மங்களா சாசனம் செய்தல்’ என்று கூறுவது வைணவ மரபு. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் மிகுதியானவற்றிற்கு மங்களா சாசனம் செய்திருக்கும் ஆழ்வார் திருமங்கை யாழ்வார்தாம். இவரால் பாடப்பெற்றுள்ள திருப்பதிகள் மொத்தம் எண்பத்தாறாகும். இவருக்கு அடுத்தபடியாக மிக்க திருப்பதிகளைப் பாடியிருப்பவர், ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப்படும் நம்மாழ்வார்தாம். நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்றுள்ள திருப்பதிகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்தைந்தே

மிகுந்த திருப்பதிகட்கு மங்களா சாசனம் செய்துள்ள பெருமையேயன்றி மற்றொரு பெருமையும் திருமங்கை யாழ்வாருக்கு உண்டு. ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ள