பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கெடிலக்கரை நாகரிகம்


இங்கே ‘போக்குவரவு’ என்னும் தொடர் தண்ணீரிலே தெப்பத்தின் துணைகொண்டு போய்வரும் பயணத்தை மட்டும் குறிக்கவில்லை; காலால் நடந்து சென்று வருவதையும் குறிக்கிறது. தண்ணீர் உள்ளபோது தெப்பத்தைப் பயன்படுத்தியும், தண்ணீர் இல்லாத போதும் தண்ணீர் இல்லாத ஆறுகளிலும் காலாலேயே நடந்தும் போய் வந்தனர். ஏனெனில், இந்தக் காலத்தைப் போல் அந்தக் காலத்தில் செப்பனிடப்பட்ட பாதைகளே இருந்திருக்க முடியாது. மழைக் காலத்தில் மழைநீர் ஓடியோடி இயற்கையாக உண்டாக்கிய ஆற்றுப் பாதைகள் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்திருக்கக்கூடும். கல்லும் முள்ளும் புல்லும் புதரும் மரஞ்செடி கொடிகளும் நிறைந்த மற்ற தரைப் பகுதியில் நடப்பதை விட, மழைநீர் ஓடியோடி உண்டாக்கிய இயற்கையான பாதையில் நடப்பதே வசதியானது. அந்த இயற்கைப் பாதை, மேடு பள்ளமின்றிச் சமமட்டமாகவும் மென்மையாகவும் தூய்மையாகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. எனவே, அத்தகைய ஆற்றுப் பாதைகளை அக்கால மக்கள் நடப்பதற்குப் பயன் படுத்திக் கொண்டனர். இயற்கை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்த அந்தப் பாதைகளைப் பார்த்துப் பார்த்துத்தான், பின்னர் மக்கள், வேறிடங்களில் அவை போலவே செயற்கையாகப் பாதைகள் அமைத்துக் கொண்டனர். அந்தச் செயற்கைப் பாதைகளையும் ‘ஆறு’ என்ற பெயராலேயே அழைத்தனர்.

இந்தக் கருத்துக்கு ஆதாரம் வேண்டுமென்றால் என் சொந்தப் பட்டறிவிலிருந்தே (அனுபவத்திலிருந்தே) சொல்ல முடியும். நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனா யிருந்தபோது இதைப் பட்டறிந்துள்ளேன். மயிலம் மலைப் பாங்கான ஊர். அந்த ஊரைச் சுற்றியுள்ள வெற்றிடங்களிலும் தோப்புக்களிலும் நடப்பது தொல்லை. தரை கல்லும் முள்ளும் நிறைந்து மேடுபள்ளமாக இருக்கும். புதியவர்கள் கால் வைக்க முடியாது. அப்பகுதிகளில் மழை நீர் ஓடியோடி இயற்கையாக ஏற்பட்டுள்ள பாதைகள் மட்டும் மென்மையாகவும் வெண்மையாகவும் அழகாகவும் சமமாகவும் நடப்பதற்கு வசதியாக இருக்கும். இன்னும் இதுபோன்ற இயற்கைப் பாதைகளைப் பல ஊர்க் காட்டு மேடுகளிலும் கண்டுள்ளேன்.

இந்தக் காலத்திலேயே இன்னும் பல ஊர்களில் ஒழுங்கான பாதைகள் இல்லாத நிலையில், அந்தக் காலத்து மக்கள் எவ்வாறு ஒழுங்கான பாதைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும்? இயற்கையாய் ஏற்பட்ட ஆற்றுப் பாதைகளைத்தானே பயன்படுத்தியிருக்க முடியும்? ஆம்.