பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

213


புலியூர்க் கலம்பகம்’ எனப்படும். இதில் பாயிரப் பாடல்கள் மூன்று உட்பட மொத்தம் நூற்று மூன்று பாடல்கள் உள்ளன.

இடைக்கால இலக்கியம்

கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வகைகளைக் காலத்தால் பிற்பட்டவையெனக் கூறுவது வழக்கம். சிற்றிலக்கிய வகைகள் பிற்காலத்தில் தோன்றியவை என்பது உண்மையெனினும், கலம்பக இலக்கியம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதே தவிர, பொதுவாகப் பார்க்குமிடத்து இடைக்காலத்தைச் சேர்ந்ததே இது. கலம்பக இலக்கியத்தை இடைக்காலத்தைச் சேர்ந்த பெருமைக்கு உரியதாக ஆக்கிய பெருமை திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்திற்குண்டு.

கலம்பக நூல்களுக்குள் காலத்தால் முற்பட்டவை நந்திக் கலம்பகமும் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் ஆகும். இவ்விரண்டனுள் நந்திக் கலம்பகம் சில ஆண்டுகள் முற்பட்டது. 844ஆம் ஆண்டு தொடங்கி 866வரை ஆண்ட மூன்றாம் நந்திவர்ம பல்லவன்மேல் (பெயர் தெரியா ஒருவரால்) இயற்றப்பட்டது நந்திக் கலம்பகம். இஃது ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சேர்ந்தது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டதாகும்.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் என்பார். சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்க தேவர், சூளாமணி இயற்றிய தோலா மொழித் தேவர் முதலிய சமணசமயப் பெரியார்களின் பெயர்களோடு தொல்காப்பியத் தேவர் என்னும் பெயரை ஒப்பு நோக்குமிடத்து, இவர் முதலில் சமணசமயத்தைப் பின்பற்றியிருந்து பின்னர்ச் சைவ சமயத்திற்கு மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை மெய்ப்பிப்பதுபோல் இவரைப் பற்றிப் பின்வருமாறு ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது:

தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் ஒரு சைனக் கோயில் கட்டுவதற்காக ஓரிடத்தில் செங்கல் சூளைபோட ஏற்பாடு செய்தார். அது கண்ட திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார் சிவனுக்கு உரிய எல்லையில் நீர் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்டு மறித்தனர். அதற்குத் தேவர், ‘உலகம் முழுவதுமே சிவனுக்கு உரியதாயிருக்க, நீவிர் இச்சிறு எல்லையை மட்டும் சிவனுக்கு உரியதாகக் கூறுகிறீர்களே’ என்னும் கருத்தில்,

“வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண்
பாதம் திருப்பா திரிப்புலியூர் - நாதர்