பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை இலக்கியங்கள்

223


"ஆலைவாய்க் கரும்பாட்டு சாறு அட்டிடு புகையும்”

என, கரையேற விட்ட நகரில் கரும்பாலை இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. புராணங்களில் கற்பனைகள் பல இருப்பது உண்மையெனினும், கரும்பாலையைப் பொறுத்த வரையும் உண்மையாகவே தெரிகிறது. இந்த நூல் 1892ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. கரையேறவிட்ட நகராகிய வண்டிப் பாளையத்தில் 1843ஆம் ஆண்டிலேயே பாரி கம்பெனியாரால் கரும்பாலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றும், பாரி கம்பெனியார் ஆலை நிறுவுவதற்குமுன் பழங்கால முறையில் நாட்டு ஆலையும் நடைபெற்றிருக்கலாம்.

இவ்வாறு பல சிறப்புகட்குரிய கரையேற விட்ட நகர்ப் புராணமேயன்றி, மேலும் சில சிற்றிலக்கியங்கள் கரையேற விட்ட நகர்மேல் இயற்றப்பட்டுள்ளன. அவை வருமாறு:


2. கரையேற விட்ட நகர்

கற்பக வினாயகர் இரட்டை மணிமாலை

கரையேற விட்ட நகரில் கற்பக வினாயகர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இது வரலாற்றுத் தொடர்புடையது. கடலிலிருந்து கெடிலம் ஆற்றின் வழியாக இவ்வூரில் வந்து கரையேறிய திருநாவுக்கரசர் இங்கே தங்கி இளைப்பாறியதின் நினைவுக் குறியாக, இந்தக் கற்பக வினாயகர் கோயிலின் பக்கலில் திருநாவுக்கரசரும் இடம் பெற்றுள்ளார். அவருக்கும் சிலை உண்டு; பூசனை உண்டு. விநாயகர் எங்கும் உள்ளவர், ஆனால் இங்கே திருநாவுக்கரசரும் இணைந்து இடம் பெற்றிருப்பதால் இந்த விநாயகர் கோயிலுக்குச் சிறப்பு மிகுதி. இன்னும் சொல்லப்போனால், விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் காலத்திலிருந்தே விரிவாக ஏற்பட்டது. எனவே, விநாயகர் வழிபாட்டினும் திருநாவுக்கரசர் வழிபாடு தமிழகத்தில் சிறிது பழமையானது என்பது நினைவு கூரற் பாலது.

கற்பக விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியவர் சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்கசுவாமிகள் என்பவர். வெண்பாக்கள் பத்தும் கலித்துறைகள் பத்துமாக மாறி மாறி இருபது பாக்கள் கொண்டது இரட்டை மணிமாலை. இவ்விருபதுக்கு முன்னால் காப்புச் செய்யுள் ஒன்றும் இறுதியில் தனிவிருத்தப் பாக்கள் மூன்றும் ஆசிரியரால் இயற்றப் பட்டுள்ளன. இந்நூலின் மாதிரிக்காக, இறுதியிலுள்ள இரண்டாம் விருத்தம் வருமாறு: