பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

கெடிலக்கரை நாகரிகம்



          “கருவாதைக் கடல் கடத்தி மன்பதையை முத்தியெனும்
                    கரையின் உய்ப்பான்
          திருவாமூர் தனிலுதித்த வாகீசர் கருங்கல்லே
                    தெப்ப மாகப்
          பொருவாரி எளிதகன்று கரையேறி விட்டநகர்ப்
                    பொலிந்தெல் லோர்க்கும்
          பெருவாழ்வு பெரிதளிக்கும் கற்பக விநாயகன் தாள்
                    பேணி வாழ்வோம்."

இப்பாடலால், நாவுக்கரசர் கரையேறிய வரலாறும், அதனால் ஊருக்குக் கரையேற விட்ட நகர்’ என்னும் பெயர் ஏற்பட்ட காரணமும் நன்கு விளங்கும்.

3. கரையேற விட்ட நகர்

திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணிமாலை

இது, கரையேறவிட்ட நகர்-கற்பக விநாயகர் பக்கலில் ஒருபால் கோயில் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்மேல், சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளால் இயற்றப்பெற்ற நூலாகும். இதில் திருநாவுக்கரசரின் வரலாறு ஒன்பது பாடல்களில் சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டுள்ளது. இறுதியில் தனிப்பாக்கள் இரண்டு உள்ளன. இரண்டாம் தனிப்பாடலில் வரலாற்றுக்குப் பயன்படும் செய்தியொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையேற விட்ட நகரில் கற்பக விநாயகர் கோயிலை ஒட்டித் திருநாவுக்கரசர் திருமடம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் திருநாவுக்கரசர் தங்கியிருந்ததாகக் குறிப்பின் உணரப்படுகிறது. இந்தச் செய்தியை உணர்த்தும் அப் பாடல் வருமாறு:

"திருவாக்கும் எழிலாமூர் தனிலுதித் தெக்கலையும்
தேர்ந்ததிகைப் பிரானருளால் செறிசூலை தவிர்ந்து
கருவாக்கு முருட்டமணக் கடலுமவர் வஞ்சக்
கடலுமவ ரிடுகடலுங் கடந்தருளிற் கதித்தே
மருவாக்கு மலர்ப்பொழில்சூழ் கரையேற விட்ட
மாநகரில் புரிமடத்தில் வாஞ்சையுடன் அமரும்
திருவாக்குக்கு அரையர்தமைப் பெருவாக்கி னிறைஞ்சிற்
சிந்தித்த பேறனைத்தும் சந்திக்கும் எளிதே."

கரையேற விட்ட நகர் - திருநாவுக்கரசர் திருமடம் இப் பாடலின் மூன்றாம் அடியில் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க.