பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

225



4. கரையேற விட்ட நகர்

கற்பக வினாயகர் பஞ்ச ரத்தினம்

காப்புப் பாடல்கள் இரண்டும், கற்பக வினாயகர் கோயில் திருநாவுக்கரசர் திருமடம் ஆகியவற்றின் திருப்பணி செய்தவரைப் பற்றிய பாடல் ஒன்றும், கற்பக விநாயகரைப் பற்றிய பாடல்கள் ஐந்தும் முறையே கொண்டுள்ள இந்நூலில் ஆசிரியர் வா. இராசப்ப முதலியார் என்பவர். இவர், திருப்பாதிரிப் புலியூர் இயற்றமிழ் ஆசிரியர் சிவசிதம்பர முதலியார் அவர்களின் மாணாக்கராவார். ஆசிரியர் இராசப்ப முதலியார், கரையேற விட்ட நகர் - ஸ்கந்த பக்த ஜனசபையின் தலைவராய்ப் பணியாற்றியுள்ளார்.

நூல்களின் பதிப்பும் காலமும்

மேற்கூறப்பட்டுள்ள இரட்டை மணிமாலை, நவமணி மாலை, பஞ்சரத்தினம் ஆகிய மூன்று நூல்களும், “கற்பக விநாயகக் கடவுள் - திருநாவுக்கரசு சுவாமிகள் தரும கைங்கரியம் சு. சொக்கலிங்கம் பிள்ளையால், சோபகிருது ஆண்டு புரட்டாசித் திங்களில், சென்னை கலாரத்நாகர அச்சு யந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டன” - என்பதாக நூல்களின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த ‘சோபகிருது’ ஆண்டு என்பது, நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டு அன்று; அல்லது இற்றைக்கு நூற்றிருபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருதும் அன்று இற்றைக்கு அறுபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டே இது. எனவே, 1903ஆம் ஆண்டில் இந்நூல்கள் அச்சிடப்பட்டன என்பது தெளிவாகும். ஆகவே, இந்நூல்களின் ஆசிரியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்கள் என்பதும் தெளிவு.

இந்நூல்கள் அளவால் சிறியனவாயும் காலத்தாற் பிற்பட்டனவாயும் இருப்பினும், கெடிலக்கரையோடு மிக்க தொடர்புடைய திருநாவுக்கரசரையும், கெடிலக்கரையின் இன்றியமையாத இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) ஒன்றான கரையேற விட்ட நகரையும் பற்றியனவாதலின் இந்நூலில் சிறப்பிடம் பெற்றன.