பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

கெடிலக்கரை நாகரிகம்



தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாகக் காட்டுவளம் உடையது திருக்கோவலூர் வட்டந்தான். மலையமான் மரபு மன்னர்கட்கு உரியனவாகச் சங்க இலக்கியங்களில் பலபடப் புகழப்பட்டுள்ள முள்ளுர் மலையும், முள்ளுர்க் காடும் இப்பகுதியைச் சேர்ந்தனவே. இந்த முள்ளுர் மலை பின்வருமாறு சங்க நூல்களிற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது:

"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு"

- நற்றிணை -170.

"மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து"

- நற்றிணை - 291 – கபிலர்.

"முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளுர்க் கானம் நண்ணுற வந்து"

- குறுந்தொகை - 312 - கபிலர்.

"முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி"

- அகநானூறு - 209 - கல்லாடனார்.

"பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட
மாரி உறையினும் பலவே"

- புறநானூறு - 123 - கபிலர்.

"கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பிற்
பறையிசை அருவி முள்ளுர்ப் பொருந"

- புறநானூறு - 126 - மாறோக்கத்து நப்பசலையார்.

"பொய்யா நாவின் கபிலன் பாடிய
மையணி நெடுவரை யாங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவல் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந"

- புறநானூறு - 174 - மா. நப்பசலையார்.

இந்தப் பாடல்களில் முள்ளுர் மலையும் காடும் மலையமான் மன்னரும் புகழப்பட்டிருத்தலைக் காண்கிறோம்.