பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கெடிலக்கரை நாகரிகம்


இந்தியாவிலோ, வடக்கேயிருந்து, தெற்கே வரவர நிலப்பகுதியின் அகலம் சுருக்கிக்கொண்டே வருகிறது, இந்தியாவின் தெற்குக் கோடி தமிழ்நாடு, கேரளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தரைப்பகுதி கீழ்கடலை நோக்கிச் சரிவாயுள்ளது. கேரளத்தின் தரைப்பகுதி மேல்கடலை நோக்கிச் சரிந்துள்ளது. இரு கடல்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் நீளம் மிகக் குறைவு, ஒன்றோடொன்று மிக நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற இரு கடல்களுக்கிடையே, தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியாகிய திருநெல்வேலி மாவட்டத்திற்கும் கேரள நாட்டிற்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. அம்மலையின் மேற்கே தோன்றும் ஆறு மேல் கடலை நோக்கி மலையாள நாட்டிலும், அம்மலைக்குக் கிழக்கே தோன்றும் ஆறு கீழ்கடலை நோக்கித் தமிழ் நாட்டிலும் பாய்வது இயல்பு, அந்த முறையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பெரிய பொதிகை என்னும் அகத்தியர் மலையில் தோற்றங் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடி, கிழக்கே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. ஒரு நாட்டின் ஒரு மாவட்டத்திற்குள்ளேயே தோன்றி முடியும் ஓர் ஆற்றின் நீளம் மிசிசிப்பியைப்போல் எவ்வாறு நீளமாயிருக்கமுடியும்?

இதுகாறும் கூறியவற்றால், நிலப்பகுதி வரவரச் சுருங்கிக்கொண்டுபோகும் தமிழகத்தின் ஆறுகள், உலக ஆறுகள் பலவற்றைப்போல் மிகமிக நீளமாயிருக்க முடியாது என்பது தெளிவாகும். எனவே, தமிழ்மக்கள், ஆறுகளைப் பொறுத்தமட்டில், ‘நாம் உலகினரோடு போட்டி போட முடியவில்லையே’ என்று ஏங்கவேண்டியதில்லை.

தமிழக ஆறுகளுள் கெடிலம்

தமிழகத்தில் ஓடும் ஆறுகளுக்குள்ளேயே 75 கல் தொலைவு ஓடும் தாமிரவருணியைவிட 165 கல் தொலைவு ஓடும் வையை ஆறு நீளமானது; அதனினும், 230 கல் தொலைவு ஓடும் பாலாறு நீளமானது; அதைவிட, 250 கல் தொலைவு ஓடும் தென்பெண்ணையாறு நீளமானது; அதைக்காட்டிலும், 480 கல் தொலைவு ஓடும் காவிரியாறு நீளமானது. இவ்வேறுபாடுகட்குக் காரணம் என்ன?

தாமிரவருணியும் வையையும் தமிழ்நாட்டிலேயே தோன்றித் தமிழ் நாட்டிலேயே முடிபவை. பாலாறும் தென்பெண்ணையும் தமிழ்நாட்டுக்கு அண்மையில் மைசூர் நாட்டுக் ‘கோலார்'