பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசனமும் பயிரும்-அணைக்கட்டுகள்

249



திருவதிகை அணையின் வடபகுதி பார்ப்பதற்கு மிகவும் இனிமையான குளிர்ச்சியான தோற்றம் உடையது. ஆற்றின் கரையிலும் கால்வாய்க் கரையிலும் உள்ள சோலைகளும் தோப்புக்களும் கண்களுக்கு மிக்க கவர்ச்சி ஊட்டுகின்றன. அமைதியான சூழ்நிலையுடைய அந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருந்தாலும் சலிப்புத் தட்டாது. கோடைக் காலத்தில் குன்னுருக்கும் குற்றாலத்திற்கும் கோடைக்கானலுக்கும் போய்த்தான் தீரவேண்டும் என்பதில்லை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அணைக்கரைக்குச் சென்று பொழுது போக்கினாலே போதும். இளங்காதலர்கள் தனித்து இன்பப் பொழுது போக்குதற்கு உரியது மட்டுமன்றி, எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏன், தவம் புரியும் முனிவர்களுக்குங்கூடத் தக்க சூழ்நிலை உடையது அந்த இடம். அத்தகைய திருவதிகை அணையின் படம் முன்பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.

முன்பக்கமுள்ள படம் அணையின் அழகான வடகரையில் இருந்துகொண்டு எடுத்த படம். அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அணைக்கு நடுவே, அணையின் சமதளத்துக்குமேல் சிறிது உயரமாக, மூடப்பட்டுள்ள நான்கு கண்கள் தெரிவதைப் படத்தில் காணலாம். 1967 சனவரி நான்காம் நாள் பிடித்த படம் இது. கோடைக் காலத்தில் இதுபோல் அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்காது. அணைக்குக் கீழேதான் தண்ணீர் இருக்கும். கண்களைத் திறந்தே தண்ணீர் விடவேண்டும். ஆனால், என்றுமே தண்ணிர் வற்றுவது கிடையாது. எந்தக் காலத்திலும் ஒரளவு தண்ணிராவது அணைவழியாக வெளியேறிக்கொண்டிருக்கும். இப்போது அணையின் சமதளத்துக்கு மேல் கணுக்கால் அளவு தண்ணிர் வழிந்தோடுவதைப் படத்தில் காணலாம். மீனவர்கள் இக்கரைக்கும் அக்கரைக்குமாக அணையின்மேல் நடந்து சென்று மீன் பிடிக்கிறார்கள். அணையின் தளத்தில் இருக்கும் பாசி வழுக்கிவிடாமல் இருப்பதற்காக, மீனவர்கள் தம் கால் கட்டை விரல்களில் தழைகளைச் சுற்றிக் கொண்டு, கட்டை விரல்களை அழுந்த ஊன்றித் தேய்த்துக்கொண்டே நடந்து செல்லும் காட்சி, ஒரு வகை ‘சர்க்கஸ்’ காட்சிபோல் இருக்கிறது.

4. வானமாதேவி அணை

திருவதிகை அணையைத் தொடர்ந்து கிழக்கே ஏழு கி.மீ. தொலைவு வந்தால் வானமாதேவி அணையைக் காணலாம். இது, கடலூருக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் வானமாதேவி