பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

259



பாலூர்ப் பாலத்திற்குத் தெற்கே அஃதாவது ஆற்றின் தென்கரையில் சென்னப்ப நாயக்கன் பாளையம் - நடுவீரப்பட்டு என்னும் இரட்டை ஊர்கள் உள்ளன. இந்தப் பகுதி சென்னப்ப நாயக்கருக்கு உரியதாயிருந்த ‘பாளையப்பட்டு’ ஆகும். இந்தப் பாளையப்பட்டில் 8 பேட்டைகளும் 16 குப்பங்களும் அடங்கியிருந்தன. எனவே, இப் பகுதி மிகப்பெரியது என்பது புலப்படும். இப் பகுதியினர் இன்றியமையாத் தேவைகளை முடித்துக்கொள்வதற்குக் கடலூருக்கே வரவேண்டும். சில தேவைகளைப் பண்ணுருட்டியிலும் முடித்துக் கொள்ளலாம். பண்ணுருட்டி, கடலூர் இரு நகரங்களையுமே ஆற்றைக் கடந்தால்தான் அடையமுடியும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கான நாள்களில் இப் பகுதி மக்கள் அடைந்த அல்லலுக்கு அளவேயில்லை; இந்தக் காலத்தில் உறவினர் குடும்பங்களில் நல்லது கெட்டது நடந்தாலும் அக்கரையினர் அக்கரையிலேயே இக்கரையினர் இக்கரையிலேயே இருக்க வேண்டியதுதான்! உடல் தெம்பும் உள்ள உறுதியும் உடையவர்கள் வேண்டுமானால், ஆற்றின் தென் கரையை ஒட்டிச் செல்லும் மலை வழியாகக் கல்லிலும் முள்ளிலும் ஒற்றையடிப் பாதையிலும் நடந்து கடலூரை அடைய முடியும். பன்னெடுங்காலமாகத் தீராதிருந்த இப் பெருந்தொல்லை 1965 ஆம் ஆண்டு கட்டிய பாலத்தின் வாயிலாகத் தீர்ந்தது. மக்கள் மட்டில்லா மகிழ்வெய்தினர்.

மற்றும், இந்தப் பாலத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில்தான் வானமாதேவி அணைக்கட்டு உள்ளது அப்பகுதியில் ஆற்றின் தென்கரையில் வானமாதேவி, திருமாணிகுழி முதலிய ஊர்கள் உள்ளன. இந்தச் சூழ்நிலையையும் இணைத்துப் பார்க்குங்கால், பாலூர்ப் பாலத்தின் இன்றியமையாமை இன்னும் நன்கு புலப்படும்.

வானமாதேவிக்கு

நெல்லிக் குப்பத்திலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு சிறு குறும் பாதை கெடிலத்தைக் கடந்து, தென்கரைக்கு அப்பால் சிறிது தொலைவிலுள்ள வானமாதேவிக்குச் செல்கிறது. மிக மிகக் குறுகிய இச் சிறுபாதையில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை.

திருவயிந்திரபுரம் அருகில்

கடலுரரின் ஒர் உட்பிரிவாகிய திருப்பாதிரிப் புலியூர் என்னும் நகரிலிருந்து ஒரு மாவட்ட நெடும்பாதை புறப்பட்டு,