பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

கெடிலக்கரை நாகரிகம்



இந்தத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பிறதுறைமுகங்கட்கும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலுமுள்ள சில நாடுகட்கும் கப்பல் போக்குவரவு நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களைக் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பிலும், தொழில் வாணிகத் துறைகள் என்னும் தலைப்பிலும் விரிவாகக் காணலாம். இந்தத் துறைமுகத்தில் கப்பல்கள் கரைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் நின்று கொண்டிருக்கும்; துறைமுகத்திற்கும் கப்பல்களுக்கும் இடையே, உப்பனாற்றின் வழியாகப் படகுகள் இயங்கிப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும். கடல் நீரின் ஏற்றவற்றத்திற்கு இயைய, உப்பனாற்றில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்போது படகுகள் விடப்பட்டு நன்கு போய்வரும்.

விண்வழிப் போக்குவரவு

திருக்கோவலூர் வட்டத்தில் செடிலம் ஆற்றிற்குத் தென்மேற்கே ஆறு கி.மீ தொலைவில் உளுந்துர்ப் பேட்டை புகைவண்டி நிலையத்திற்கருகில் ஒரு விண்ணூர்தி நிலையம் (விமானநிலையம்) உள்ளது. இஃது, இரண்டாவது உலகப் பெரும்போரின்போது 1942ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந் நிலையத்தின் வாயிலாக விண்ணுர்திப் போக்குவரவு இப்போது நடைபெறவில்லை இருப்பினும், இன்றியமையாத் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக இது நன்கு காக்கப்பட்டு வருகிறது.

இடைக் காலத்தில் இருமுறை இந் நிலையம் பயன்படுத்தப் பட்டது. 1954ஆம் ஆண்டு சனவரித் திங்களில், இந்தியத் தலைமையமைச்சராயிருந்த நேரு பெருமான் அவர்கள் தமிழகம் வந்தபோது, விண்ணுரர்தியில் சென்னையிலிருந்து இந்த உளுந்துார்ப்பேட்டை நிலையத்தில் வந்திறங்கிப் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் முதலிய இடங்கட்குச் சென்றார்கள். நேரு அவர்களைப் போலவே, ருசிய நாட்டுத் தலைவர் பிரெஷ்னோ அவர்களும் 1961 ஆம் ஆண்டில் விண்ணுர்தியில் வந்து இந்த நிலையத்தில் இறங்கி நெய்வேலி முதலிய இடங்கட்குச் சென்றார்கள்.

இஃதன்றி, இடையிடையேயும் அடிக்கடி இங்கே வானவூர்திகள் வந்து இறங்குவதுண்டு. அண்மையில் 1966 நவம்பர்த் திங்களில் ஒரு முறையும் 1967 மார்ச்சுத் திங்களில் ஒரு முறையும் இங்கே விண்ணுர்தி இறங்கிற்று. இப்படி ஏதோ தேவையுள்ள போதெல்லாம் இறங்குவது உண்டு. இதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து காக்கப்பட்டு வருமாற்றை அறியலாம்.