பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

269



இப்போது வறிதே கிடக்கும் இந் நிலையம், இரண்டாவது உலகப்பெரும் போர்க் காலத்தில் மிக்க நெரிசல் உடையதாயிருந்தது என்பதைப் புதிதாக அறிபவர் பெருவியப்பு அடையாமலிருக்க முடியாது. அப்போது இங்கே நூற்றுக் கணக்கான விண்ணூர்திகள் இருந்தன. போர்ச் சூழ்ச்சிகட்கு ஏற்ற அமைப்புக்களும் இங்கே இருந்தன. இதைக்கொண்டு, இந் நிலையத்தின் பரப்பையும் வன்மை - திண்மையினையும் அறிய முடிகிறது. அந்தப் பரப்பும் வன்மையும் இப்போதும் உள்ளன. போனது வந்ததைப் பழுது பார்த்துச் சீர்திருத்திப் போக்குவரவுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால், தென்னார்க்காடு மாவட்டத்திற்கு வருபவர்களும் இங்கிருந்து செல்பவர்களும் புகைவண்டியிலும் பேருந்து வண்டியிலும் நெடுந்தொலைவு சென்று படும் தொல்லை குறையலாம். இந் நிலையம் நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதாலும் பிற காரணங்களாலும் இனி எதிர்காலத்தில் பெரிய அளவில் விரிவாக்கப் படலாம் என உய்த்துணரலாம். [1]இப்போது, நெய்வேலி நிலக்கரித் திட்டப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு ஒரு சிறந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.


  1. *இந்தச் செய்திகள் எழுதிய நாள் : 5.5-1967