பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21. தொழில் - வாணிகம்

கைத்தொழில்கள்

கெடில நாட்டில் இப்போது பல வேறு பெருந்தொழில் களுக்கும் சிறு தொழில்கட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பினும் அன்றும் இன்றுமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெரிய கைத்தொழில் நெசவுதான். இத்தொழில் பரவலாகப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

நெசவு

பண்டு நெசவுக்குரிய நூல்கள் கையாலேயே நூற்கப்பட்டன. இன்று ஆலைகளில் நூற்கப்பட்டு கிடைக்கின்றன. 20,40, 60, 80, 100 ஆம் எண்ணுள்ள நூல் வகைகளால் உடைகள் நெய்யப்படுகின்றன.

பண்ணுருட்டி, புதுப்பேட்டை ஆனத்துார், குடுமியாங் குப்பம், சென்னப்பநாய்க்கன் பாளையம், நடுவீரப்பட்டு, பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம், குணமங்கலம், நல்லாற்றுார், கம்மியன் பேட்டை, வண்டிப்பாளையம், புருகேசு பேட்டை, வசந்தராயன் பாளையம், கூடலூர், குறிஞ்சிப்பாடி, கருங்குழி முதலிய ஊர்களில் நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. இங்கெல்லாம் வேட்டி, துண்டு, சேலை, கைலி (லுங்கி) முதலிய வகைகள் நெய்யப்படுகின்றன. இப்போது பெரும்பாலான ஊர்களில் கைலி மிகுதியாக நெய்யப்படுகிறது. கடலூர் - வசந்தராயன் பாளையத்தில் பட்டு நெசவு நடைபெறுகிறது. கடலூர் - கேப்பர் மலைச்சிறையில் சமக்காளம் - விரிப்பு முதலியவை நெய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி திருக்கோவலூர் வட்டங்களில் சில ஊர்களில் கம்பளி நூற்பும், கம்பளி நெசவும் நடைபெறுகின்றன. கள்ளக் குறிச்சி வட்டத்தில் சில இடங்களில் சணல் நூற்பும் சணல் பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன.

நெசவு பெரும்பாலும் கைத்தறிகள் வாயிலாகவே நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் விசைத்தறிகள் இயங்குகின்றன. மின்சாரத்தால் ஒடும் விசைத்தறிகள் ஏற்படுவதற்கு முன் தோன்றி இப்போது கையால் நெய்யப்படும் கைத்தறிகள் விசைத்தறிகள் என்று சொல்லப்படுகின்றன.