பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்-வாணிகம்

281


பின்னரே அண்மையில் நெய்வேலியில் பெரிய தொழிற் சாலைகள் தோன்றியுள்ளன.

நெல்லிக்குப்பத்தில்

தாமஸ் பாரி (Thomas Parry), என்னும் ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக 1788இல் தமிழகம் வந்தார். இவர் நாளடைவில் தனி வாணிகம் புரியத் தொடங்கினார். இவர் பெயரைக் கொண்டதே ‘பாரி கம்பெனி’ என்னும் நிறுவனம். இந்நிறுவனம் தென்னார்க்காடு மாவட்டத்தில் பல இடங்களில் சர்க்கரை ஆலைகள் நிறுவிற்று. அவற்றுள் நின்று நிலைத்தது நெல்லிக்குப்பம் ஆலை ஒன்றுதான்; இது 1848இல் நிறுவப்பட்டது. இந்த ஆலைக்கு அளிக்கப்பட்ட பெயர் ‘East India Sugar Distilleries and Sugar Factories’ என்பதாகும். இது தொடக்கத்தில் சர்க்கரை உண்டாக்கியதுடன் ஆண்டொன்றுக்கு 1,60,000 ‘காலன்’ சாராயமும் காய்ச்சி விற்பனை செய்தது. பின்னர்ச் சாராயம் நிறுத்தப்பட்டது; இப்போது சர்க்கரை வேலை மட்டும் விரிவாகக் கவனிக்கப்படுகிறது. மிகப்பெரிய முதலீட்டில் மூவாயிரவர்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த ஆலை இந்தியாவின் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையாக மதிக்கப்படுகிறது. இங்கே பெரிய அளவில் தொழிலாளர் சங்கமும் இயங்கி வருகிறது.

இந்த ஆலை ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானம் உள்ள மூன்றரை லட்சம் டன் (Tons) கரும்புகளை வாங்குகிறது; டிசம்பர் திங்கட்கு மேல் சூன் திங்கட்குள் உள்ள கால அளவில், மூன்றரைக் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள முப்பதாயிரம் டன் (Tons) சர்க்கரை உண்டாக்குகிறது. மற்றும் இங்கே, பத்து இலட்சம் காலன் (gallons) ‘ஸ்பிரிட்’ (Spirits), இருபது இலட்சம் பவுண்ட் (Pounds) ‘கார்பானிக் ஆசிட் காஸ்’ (Carbonic Acid Gas) ஆகியவையும் ஆண்டுதோறும் உண்டாக்கப்படுகின்றன. இங்கே உண்டாக்கப்படும் பொருள்கள் தமிழகம், கேரளம் முதலிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலையேயன்றி , 50,00,000 ரூபாய் முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலையும் நடத்துகின்றனர். இதன் பெயர் “Parrys Confectionary, Limited’ என்பதாகும். இங்கே உண்டாக்கப்படும் இனிப்பு வகைகள் (மிட்டாய் இனங்கள்) இந்தியா முழுவதிலும் விற்கப்படுகின்றன.