பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்-வாணிகம்

285


இறக்குமதி அளவு 5 இலட்சம் டன்’ எனலாம். எதிர்காலத்தில் இஃது இரட்டிப்பாகும்; இது, நெய்வேலித் திட்ட வளர்ச்சியின் அடிப்படையைப் பொறுத்து எதிர்பார்க்கப்படுகிறது.

கூடலூர்த் துறைமுகத்திலிருந்து நாவாய்கள் இந்தியத் துறைமுகங்கட்கும் அயல்நாடுகளின் துறைமுகங்கட்கும் சென்று வருவதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் - பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பது உண்மையான செய்தியே. வெள்ளைக்காரர் காலத்தில் வாணிகக் கப்பல்கள் இங்கிருந்தபடி இந்தியக்கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் வழியிலுள்ள இலங்கைத் துறைமுகத்திற்கும் சென்று வந்தன; எனவே, இத்துறைமுகம் கப்பல்கட்கு ஒர் இன்றியமையா நிலையாக (முக்கியக்கேந்திரமாக) இருந்து வந்தமை புலனாகும். பாய்மரக்கப்பல்கள் இங்கிருந்து இரண்டு வார காலத்தில் இலங்கையை அடைந்துவிடும், சுருங்கக் கூறின், சப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பிரான்சு, பெல்சியம், செர்மனி முதலிய வெளிநாட்டுத் துறைமுகங்கள் இந்தியத் துறைமுகங்கள் ஆகியவற்றோடு கூடலூர்த் துறைமுகம் தொடர்பு கொண்டு வருகிறது எனலாம். ஒரு துறைமுகத்திற்கு இருக்க வேண்டிய தூக்கி இறக்கிகள், படகுகள், கிடங்குகள், கப்பல் வாணிக நிறுவனங்கள், கலங்கரை விளக்கம், புகைவண்டிப் பாதை தொடர்பு முதலிய வசதிகள் பலவும் இங்கே உள்ளன. இன்னும் இங்கே எத்தனையோ வளர்ச்சிகள் காத்து நிற்கின்றன. இந்தியக்கிழக்குக் கடற்கரை யிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம் என்பது ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது.

இங்குள்ள கப்பல் வாணிக நிறுவனங்களுள் பாரி கம்பெனி நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தார் கப்பல் வாணிக ஏற்றுமதி இறக்குமதித் தரகுப் பேராளராக இருந்து கொண்டு விரிவான முறையில் தொழில் - வாணிகம் நடத்தி வருகின்றனர். கூடலூர்த் துறைமுகத்தில் தொழிலாளர் சங்கங்களும் உள்ளன.

கூட்டுறவு

இந்தக்காலத்து வளர்ச்சியின் பயனாகக் கூட்டுறவு முறையில் வங்கி, வாணிக நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்கள் முதலியவை தோன்றித் தொழிற் பெருக்கத்திற்கும் வாணிக வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன.