பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22. கெடிலக்கரை ஊர்கள்

தென்னார்க்காடு மாவட்டம்

கெடிலம் ஆறு ஓடும் பகுதி இப்போது தென்னார்க்காடு மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இப்பெயர் ஆங்கிலேயர்களால் இடப்பட்டது. தமிழகத்தில் முதல் முதலாக ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மாவட்டம் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் வடபகுதி ஆர்க்காட்டு நவாபுகளால் ஆளப்பட்டது. அவர்கள் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ‘ஆர்க்காடு’ என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். ஆர் என்றால் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாயிருந்ததால் ‘ஆர்க்காடு’ எனப்பட்டது. ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்ட பகுதி ஆர்க்காட்டுச் சீமையாயிற்று. அப்பகுதி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் அதன் வடபகுதி வடார்க்காடு மாவட்டம் எனவும், தென் பகுதி தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்; தலைநகர் கடலூர்.

இம் மாவட்டத்தில் கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் கெடிலத்தின் அக்கரையிலும் இக்கரையிலும் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள இன்றியமையாச் சிறப்புடைய சில ஊர்களைப் பற்றிய விவரங்களை வட்ட வாரியாக இப்பகுதியில்

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில்தான் கெடிலம் தோன்றுகிறது. இந்த வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ.; மக்கள் தொகை 3,83,500; தலைநகர் கள்ளக்குறிச்சி. தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்கு எல்லை இவ் வட்டந்தான். மாவட்டத்திற்குள்ளேயே இந்த வட்டத்தில்தான் மலையும் காடும் மிகுதி. இதன் மேற்குக் கோடியில் கல்வராயன் மலை உள்ளது.