பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

289


கெடிலம் ஆறு திருக்கோவலூர் வட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிவரையும் வட்டத்தின் நடுவாக ஒடி வட்டத்தைக் கடக்கிறது. கெடிலத்தின் துணையாறாகிய தாழனோடை அல்லது சேஷ நதி எனப்படும் ஆறு தோன்றுவதும் கெடிலத்தோடு கலப்பதும் திருக்கோவலூர் வட்டத்திற்குள்ளேயே தான். இவ் வட்டத்தின் வழியாகத் தென்பெண்ணையாறும் அதிலிருந்து பிரியும் மலட்டாறுங்கூட ஒடுகின்றன. பாடல் பெற்ற திருப்பதிகள் பல இங்கே உள்ளன. பல்வேறு சமயப் பெரியார்கள் பலரின் தொடர்பும் புலவர் பெருமக்கள் பலரின் தொடர்பும் சங்ககாலந் தொட்டு இவ் வட்டத்திற்கு உண்டு. இங்கே கல்வெட்டுச் செல்வத்திற்குக் குறைவேயில்லை.

இப் பகுதிக்கு மலாடு, சேதிநாடு, மகதநாடு, சகந்நாத நாடு, சனநாத நாடு முதலிய பெயர்கள் வழங்கப் பட்டமையைக் ‘கெடிலநாடு’ என்னும் தலைப்பிலும், இப் பகுதியில் மலையமான்மரபு மன்னர்களும் வாணர் மரபு மன்னர்களும் பிற்காலப் பல்லவ மரபு மன்னர்களும் அரசோச்சிய வரலாற்றைக் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்ற தலைப்பிலும் விரிவாகக் காணலாம். கல்வெட்டுகளில்,

‘சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக் கோவலூர்’-

‘ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து பிரம்ம தேயம் திருக்கோவலூர் ஆன பூர் மதுராந்தக சதுர் வேதி மங்கலத்து திருவிடை கழி ஆழ்வார்க்கு இவ் ஊர் சபையோம் விற்றுக் கொடுத்த நிலமாவது’-

என்றெல்லாம் இருக்கும் பகுதிகளைப் பார்க்குங்கால், அன்று, தாலுகா (வட்டம்) என்பது போல் கூற்றம் என்பதும், ஜில்லா (மாவட்டம்) என்பது போல் வளநாடு என்பதும், மாகாணம் (மாநிலம்) என்பதுபோல் மண்டலம் என்பதும் வழங்கப்பட்டமை புலனாகும். அன்று, சோழர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ என அழைக்கப் பட்டமையும், தென்னார்க்கரடு மாவட்டம் போன்றிருந்த ஒரு பெரும்பகுதி சகந்நாத வளநாடு அல்லது ‘சனனாத வளநாடு’ என வழங்கப்பட்டமையும், திருக்கோவலூர் வட்டம் போன்றிருந்த ஒரு சிறு பகுதி ‘குறுக்கைக் கூற்றம்’ என அழைக்கப்பட்டமையும், திருக்கோவலூருக்கு ‘மதுராந்தக சதுர்வேதி மங்கலம்’ என வேறொரு பெயர் இருந்தமையும் மேலுள்ள கல்வெட்டுப் பகுதிகளால் புலப்படும்.

கெ-19