பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

295



திருநறுங்குன்றம்

இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 19 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இது, திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவுங்கூட அழைக்கப்படுகிறது. இச் சிற்றுாரின் மக்கள் தொகை 500 ஆகும். இது திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.

இவ்வூர்க்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய கவின்மிகு சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது பார்சுவநாதர் என்னும் சைனத்தீர்த்தங்கரரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது; மற்றும், குன்றுப் பகுதியில் ஒரு சிறிய சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன.

இந்த சமணசமயக் கோயில் அப்பாண்டைநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. அப்பாண்டைநாதன், அப்பாண்டைராசன் என்னும் பெயர்களைக் கொண்ட மக்கள் பலரைத் திருநறுங்குன்றத்தில் காணலாம். பண்டு இங்கே சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தனர்; இப்போது நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றனர். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் அப்பாண்டைநாதரைப் பாடியுள்ளனர் என்பதாகவும், கம்பர் இவ்வூர்ச் சமணர்களின் ஒப்புதலுக்குப் பிறகே தம் இராமாயண நூலை அரங்கேற்றினார் என்பதாகவும் பல செய்திகள் சமணர்களால் கூறப்படுகின்றன. இதைக்கொண்டு, ஒரு காலத்தில் இங்கே சமயப்பிணக்கு நிகழ்ந்திருக்க வேண்டும் என உய்த்துணரப்படுகிறது.

ஆற்றூர்

இவ்வூர், திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 22கி.மீ. தொலைவில் திருநறுங்குன்றத்திற்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. ஆற்றங்கரையில் இருப்பதால் ஆற்றூர் எனப்பட்டது போலும். இது பேச்சு வழக்கில் ஆத்தூர் என மருவி வழங்கப்படுகிறது. இவ்வூர், மேட்டு ஆத்தூர், பள்ள ஆத்தூர் என இரு பிரிவினதாயுள்ளது. பள்ள ஆத்தூரில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.

திருக்கோவலூர் நாட்டில் ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஏகம்பவாணன் என்னும் சிற்றரசன்