பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

311


'நாவலூரர்’ என அழைக்கப்படும் சுந்தரர் தமது திருநாவலூர்த் தேவாரப் பதிகத்தின் இறுதிப் பாடலில்,

"நாதனுக்கு ஊர்நமக்கு ஊர்நரசிங்க முனையரையன்

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்..."

எனக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

நரசிங்க முனையரையர் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட வரலாறும், அதற்கொரு சான்றாகத் திருநாவலூர்க் கோயிலுக்கு எதிரே ‘கச்சேரி மேடு’ இருப்பதும், நரசிங்க முனையரையர் நாவலூரில் செய்த சிவப்பணியும் இன்ன பிறவும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் ‘நரசிங்க முனையரையர்’ என்னும் பிரிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முனையரையர் மரபு மன்னர்கள் நரசிங்க முனையரையர் - இராமன் முனையரையர் என மாறி மாறிப் பட்டப் பெயர்கள் வைத்துக் கொண்டார்கள் என்பதற்குச் சான்று, திருநாவலூர் வட்டாரத்து மக்கள் நரசிங்கன், இராமன் என்னும் பெயர்களை மிகுதியாக வைத்துக் கொண்டிருப்பதாகும். திருநாவலூரோடு நரசிங்க முனையரையர்க்கு இருந்த தொடர்பினை, திருநாவலூர்க் கோயிலில் அவருக்குச் சிலை இருப்பதைக் கொண்டும் அறியலாம். இச்சிலை மிகவும் அழகியது. இதன் படத்தை இந்நூலில் ‘கல்வி - கலைத்துறை” என்னும் தலைப்பில் காணலாம்.

திருநாவலூர்ச் சிவன் கோயிலின் பெயர்கள்: பக்த சனேசுவரர் கோயில், திருத்தொண்டீச்சுரம் என்பன. இறைவன் பெயர்: நாவலேசுரர்; அம்மன் பெயர், சுந்தரநாயகி, மனோன்மணி, மரம்; நாவல். இக் கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது, அருணகிரியாரின் திருப்புகழும் உண்டு. நாவுக்கரசர் இவ்வூரின் மேல் தனிப் பதிகம் பாடாவிடினும், தமது தேவாரத்தில் - பூவனூர்த் திருக்குறுந்தொகை எட்டாம் பாடலில்,

“'பூவனூர் தண்புறம் பயம் பூம்பொழில்
நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி

மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே’’

எனத் திருநாவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர் மேல் இராசப்ப நாவலர் ஒரு புராணம் பாடியுள்ளார். இவ்வூர்க் கோயிலின் வெளித் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்: