பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. கெடிலத்தின் தோற்றம்

தமிழ் நாட்டின் மாவட்டங்களுள் (Districts) ஒன்றாகிய தென்னார்க்காடு மாவட்டம் தன்னுள் எட்டு வட்டங்களைக் (Taluks) கொண்டது. அவை: செஞ்சி வட்டம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம், திருக்கோவலூர் வட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், விருத்தாசலம் வட்டம், சிதம்பரம் வட்டம் என்பன. தென்னார்க்காடு மாவட்டம், வங்காளக்குடாக் கடலையடுத்து, செங்கற்பட்டு மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடையில் உள்ளது. இம் மாவட்டத்தின் வடபகுதியாகச் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களும், தென் பகுதியாக விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றிற்கு இடையே மேற்கும் கிழக்குமாகக் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய வட்டங்கள் முறையே உள்ளன. இம்மூன்றனுள், மேற்கே உள்ள கள்ளக்குறிச்சிக்கும் கிழக்கே உள்ள கடலூருக்கும் நடுவே திருக்கோவலூர் வட்டம் உள்ளது. மொத்தத்தில், தென்னார்க்காடு மாவட்டத்தின் ‘நட்ட நடுவே’ திருக்கோவலூர் வட்டம் உள்ளதெனக் கூறலாம் (படம் பார்க்கவும்). இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு கெடிலம் ஆற்றுக்கு வருவோம்.

மையனூர்

கெடிலம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் என்னும் ஊருக்கு அருகில் தோன்றுகிறது. இந்த மையனூர், கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 16 கி.மீ. தொலைவிலும், தியாக துருக்கத்திற்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலும், ரிஷிவந்தியத்துக்கு வடமேற்கே 12 கி.மீ. தொலைவிலும், சங்கராபுரத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், திருக்கோவலூருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையனூருக்குச் சாலை வசதியின்மையால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தொலைவு அளவு ஒரு தோற்றமாக தோராயமாகக் கணிக்கப்பட்டதேயாகும்.

ஓரளவு தெளிவான பாதை வழியாக மையனூரை அடையவேண்டுமெனில், திருக்கோவலூர் - சங்கராபுரம் மாவட்ட நெடும்பாதையில் போகும் பேருந்து வண்டியில்