பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

321



இது கோயிலின் உள் தோற்றம். இந்தப் படம், கோயிலுக்கு உள்ளே வடமேற்கு மூலையில் இருந்து கொண்டு, வெளிக் கோபுரம், இடைக் கோபுரம், கருவறை விமானம் ஆகிய மூன்றும் தெரியும்படி எடுத்தது. படத்தில் நாம் பார்ப்பது, கோபுரங்களின் மேற்குப் புற அஃதாவது பின்புறத்

தோற்றத்தைத்தான் கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. படத்தில் நமக்கு இடக்கைப் புறமாகத் தொலைவில் தெரிவது கோயிலின் வெளிக் கோபுரம். அஃதாவது, முதற் பெருவாயிற் கோபுரமாகும். படத்தில் நடுவில் தெரிவது, கோயிலின் நடுவிலுள்ள இரண்டாவது கோபுரமாகும். படத்தில் நமக்கு வலக்கைப் புறமாகப் பாதி தெரிந்தும் தெரியாமலுமாக இருப்பது, கருவறையின் மேலுள்ள மிக அழகிய விமானமாகும்.

கோயிலின் முதல் கோபுரம் நாயக்க அரசரால் பதினாறாம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது; அதற்குச் சான்று, கோபுர வாயிலில் நாயக்க மன்னரின் உருவச் சிற்பம் இருப்பதாகும். இரண்டாவது கோபுரம் பாண்டிய வேந்தரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது; சான்று, அக் கோபுர வாயிலில் ‘மீன் இலச்சினை அமைக்கப்பட்டிருப்பதாகும். இந்தக் கோபுரம் கட்டிய பாண்டியன், கி.பி. 1251 - 1270 கால அளவில் தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியனாகத்தான் இருக்க வேண்டும். எனவே, இரண்டாம் கோபுரம் கட்டப்பட்ட காலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது புலனாகும்.

இந்த அடிப்படையில் பார்த்தால், திருவதிகைக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது கோபுரமாகிய உள் கோபுரம் கட்டப்பட்டிருக்க, பதினாறாம் நூற்றாண்டு வரையும் வெளிக் கோபுரம் (முதல் கோபுரம்) இல்லாதிருந்தது என்று கொள்ள வேண்டியதாயுள்ளது. உள் கோபுரம் இல்லாவிடினும் வெளிக் கோபுரம் கட்டுவதுதான் எங்கும் வழக்கம். பெரும்பாலான ஊர்களில் வெளிக் கோபுரம் மட்டுமே இருக்கக் காணலாம். எனவே, திருவதிகைக் கோயிலின் முதற் கோபுரம் நாயக்க மன்னரால் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதல், முதலாகக் கட்டப்பட்டது என்னும் கருத்தை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிக் கோபுரமும் முற்காலத்திலேயே கட்டப்பட்டிருந்து போர்க் காலத்தில் அழிந்தோ - சிதைந்தோ போயிருக்கலாம்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கனது ஆட்சியின்கீழ்த் திருவதிகை இருந்தபோது, போசள மன்னன் வீரநரசிம்ம தேவன், கோப்பெருஞ் சிங்கனால் சிறை